என்னடா இது எம்.எல்.ஏ.வுக்கு வந்த கல்யாண சோதனை.. 2வது முறையாக நின்றது ஈஸ்வரன் திருமணம்!
இன்று நடக்கவிருந்த எம்எல்ஏ திருமணம் மீண்டும் நின்றுவிட்டவிட்டது.
Recommended Video
ஈரோடு: எம்எல்ஏ ஈஸ்வரன் திருமணம் திரும்பவும் நின்னு போயிடுச்சாம்!
43 வயசாகிய பின்பு, ஒருவழியாக கல்யாணத்துக்கு சம்மதிச்சார் பவானிசாகர் எம்எல்ஏ. அதற்காக சந்தியா என்ற 23 வயது பெண்ணை பேசி முடித்து, திருமணத்திற்கு நாளும் குறிக்கப்பட்டது. ஆனால் சந்தியாவோ வீட்டை விட்டு வெளியேறி, அதனால் அவரது தாய் போலீசில் புகார் கொடுக்க, அதன்பேரில் போலீசார் சந்தியாவை வலைவீசி தேட கடைசியில் ஒருவழியாக திருச்சியில் மீட்டனர்.
பின்பு நீதிபதியிடம் சந்தியாவை கொண்டுபோய் நிறுத்தியபோது, "எம்எல்ஏக்கு என் அப்பா வயசு அவருக்கு. நான் எப்படி கல்யாணம் பண்ணிப்பேன். என் வீட்டில கட்டாயப்படுத்தறாங்க" என்று சொன்னபிறகு நீதிபதி பெற்றோரை அறிவுரைத்து சந்தியாவை அவர்களுடன் அனுப்பி வைத்தார். இதனால் சந்தியாவுடன் ஈஸ்வரனுக்கு திருமணம் நடக்காமல் நின்றுபோய்விட்டது.
மீண்டும் பெண் பார்க்கும் படலம்
சந்தியா ஓடிப்போய்விட்டதால், உடனடியாக ஈஸ்வரனுக்கு அவரது இனத்திலேயே ஒரு பெண் பார்த்தாகிவிட்டது என்றும், குறித்த நாளிலேயே திருமணம் நடக்கும் என்றும் ஈஸ்வரன் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் அதுவும் நடக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து மீண்டும் பெண் பார்க்கும் படலம் தொடங்கியது.
போதிய அவகாசம் இல்லை
குறித்த நேரத்தில்தான் திருமணம் நடக்கும் என்று சொல்லிவிட்டதாலும், இந்த திருமணத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொள்ளவிருப்பதாலும், இன்னொரு பெண்ணை மனம் முடிக்க பேசப்பட்டது. ஆனால் குறித்த நாளுக்குள் திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது இன்றுதான் ஈஸ்வரனுக்கு திருமணம் நடக்கவிருந்த நாள். ஆனால் கல்யாணத்தை ஏற்பாடு செய்ய பெண் வீட்டார் தரப்பில் போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
பந்தல் பிரிக்கவில்லை
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில்தான் இந்த திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. அதனால் இன்று நடக்க இருந்த திருமணமும் நடக்கவில்லை. திருமணத்திற்காக போடப்பட்ட பந்தல் இன்னும் பிரிக்கப்படாமல் அப்படியே உள்ளது. காரணம் எம்எல்ஏ திருமணத்தோடு வேறு இரண்டு நிகழ்ச்சிகளும் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டது.
3 நிகழ்ச்சிகளும் ரத்து?
அதாவது பன்னாரி அம்மன் கோயில் ராஜகோபுரம் அடிக்கல் நாட்டு விழா, அதிரடிப்படை முகாம் அலுவலகம் திறப்பு விழா இந்த இரண்டு நிகழ்ச்சியுடன் எம்எல்ஏ கல்யாணம். இதற்காகத்தான் சிறப்பு அலங்காரத்துடன் பந்தல் போடப்பட்டது. இந்த 3 நிகழ்ச்சிகளுக்கும் தலைமை தாங்கி நடத்தி வைப்பது முதலமைச்சர் பழனிசாமி என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எம்எல்ஏ திருமணம் நின்றுவிட்டதால், மற்ற நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐப்பசியில் கல்யாணம்
எம்எல்ஏவுக்கு பெண் இப்போது கிடைத்துவிட்டது. ஆனால் உரிய கால அவகாசம் இல்லாததால் திருமணம்தான் குறித்த நேரத்தில் நடத்த முடியவில்லை. இருந்தாலும் பெண் உறுதியாகிவிட்டதால், வருகிற ஐப்பசி மாதம் கல்யாணம் வைத்துள்ளதாக எம்எல்ஏ தரப்பில் தெரிகிறார்கள். பொதுவா, கல்யாணத்தில் பிரச்சனை இருக்கலாம். ஆனால் கல்யாணமே பிரச்சனையா இருக்கே எம்எல்ஏவுக்கு!