டிரைவர்கள் எங்கேப்பா?... கடலூரில் தேடிய அமைச்சர்: முதல்வர் தொகுதியில் முட்டல் மோதல்
தேனி: போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் சில பகுதிகளில் பாதிப்பு இல்லை என்றாலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மக்களை கடும் அவதிக்கு ஆளாக்கியுள்ளது.
மக்களின் சிரமத்தைப் போக்க ஆங்காங்கே அமைச்சர்கள் களமிறங்கியுள்ளனர்.கடலூரில் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்துக்கழக ஊழியர்களை காணாமல் அமைச்சர் எம்.சி. சம்பத், தடுமாறித்தான் போனாராம்.
கடலூர் மாவட்டத்தில் 3,600 போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்ளனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அண்ணா தொழிற்சங்கத்தினர் புதிய உறுப்பினர்களை சேர்த்ததில் அந்த தொழிற்சங்கத்தில் மொத்தம் 1500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
நேற்று முதல் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 11 தொழிற்சங்க தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்களை வைத்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்கள் 1500 பேர் இருந்தாலும், 142 பேருந்துகள் உள்ள கடலூர் டிப்போவில், இன்று காலை எந்த பேருந்துகளும் இயக்கப்படவில்லையாம்.
இதையடுத்து அமைச்சர் எம்.சி.சம்பத் டிப்போவுக்கு நேரில் சென்று அதிகாரி கருணாநிதியை சந்தித்தார். அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேருந்துகளை இயக்குமாறு கூறினார்.
சிறிது நேரம் அங்கும், இங்கும் தேடி அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்களை கண்டுபிடித்த அதிகாரி, பேருந்துகளை இயக்குமாறும், அமைச்சர் நேரடியாக வந்து கேட்டுக்கொண்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர்கள் பேருந்துகளை எடுக்க காலதாமத்தை ஏற்படுத்தினர். காத்திருந்த அமைச்சர் சட்டென கிளம்பிவிட்டாராம்.
பின்னர் மேலிடத்தில் இருந்து பிரச்சனை வரும் என்று, அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்கள் 8 பேருந்துகளை மட்டும் எடுத்துக்கொண்ட் கடலூர் பேருந்து நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அந்த பேருந்துகளில் யாரும் ஏறாமல் தனியார் பேருந்துகளில் பயணிகள் ஏறி சென்றதால், அரசு பேருந்துகளை இயக்காமல் டிரைவர்கள் அமைதி காத்தனர்.
36 பேருந்துகள் உள்ள நெய்வேலி டிப்போவில் 4 பேருந்துகள்தான் இயக்கப்பட்டன. 58 பேருந்துகள் உள்ள வடலூர் டிப்போவில் ஒரு பஸ் கூட வெளியே போகவில்லை.
45 பேருந்துகள் உள்ள திட்டக்குடியில் 3 பேருந்துகள்தான் இயக்கப்பட்டன. 130 பேருந்துகள் உள்ள சிதம்பரத்தில் 7 பேருந்துகள் தான் இயக்கப்பட்டன. 51 பேருந்துகள் உள்ள பண்ருட்டியில் 8 பேருந்துகள் இயக்கப்பட்டன.
127 பேருந்துகள் உள்ள விருத்தாசலம் டிப்போவில் 17 பேருந்துகள் இயக்கப்பட்டன.
முதல்வர் தொகுதியில் சிக்கல்
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்ற சட்டமன்றத் தொகுதியில் உள்ள போடி நகரத்தில் அரசு போக்குவரத்துக் கழக டிப்போ உள்ளது. இதில் 74 பேருந்துகள் உள்ளன. இதில் 10 பேருந்துகள் நீதிமன்ற வழக்குகள் சம்மந்தமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 64 பேருந்துகள் இயங்கி வந்தன. தற்போது ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக 30 பேருந்துகள் மட்டுமே ஆளும்கட்சியினரால் இயங்கி கொண்டிருக்கிறது. 34 பேருந்துகள் இயங்கவில்லை.
டெப்போவிற்கு வந்த எம்.பி
அதிமுக மாவட்டச் செயலாளர் சிவக்குமார், அதிமுக எம்.பி. பார்த்திபன் உட்பட கட்சியினர் 25க்கும் மேற்பட்டோர் டெப்போவுக்குள் சென்று டெப்போவில் இருந்து அனைத்து பேருந்துகைளையும் இயக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதனை அறிந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள், நகர டி.எஸ்.பி. சீனிவாச பெருமாளை சந்தித்து, ஆளும்கட்சியினர் டெப்போவுக்கு புகுந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டுகின்றனர். அவர்களை வெளியே செல்ல சொல்லுங்கள் என்று புகார் கொடுத்துள்ளனர்.
மேலும், வேன் மற்றும் லாரி டிரைவர்களை வைத்து பேருந்தை இயக்க ஆளும்கட்சியினர் முயற்சிக்கின்றனர். முறையான பயிற்சி, அனுபவம் இல்லாதவர்களை கொண்டு பேருந்தை இயக்கக் கூடாது. விபத்து ஏற்பட்டால் பொதுமக்கள் பாதிப்படைவார்கள். ஆகையால் அதனை தடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர், டிப்போக்கு சென்று ஆளும் கட்சியினரை வெளியேற்றினர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அப்ரண்டிஸ் கண்டக்டர்கள்
டிரைவர்களுக்கு திண்டாட்டம் இப்படி என்றால் கண்டக்டர்களுக்கு பெரும் சிரமமாகிப் போனது. புதிதாக போடப்பட்ட அப்ரண்டிஸ் கண்டக்டர்கள், எங்கு ஏறி எங்கு இறங்கினாலும் பத்து ரூபாய், 15 ரூபாய் டிக்கெடுதான் என்று கூறியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். டிக்கெட் கொடுத்த கண்டக்டர்களை திட்டிக்கொண்டே ஊர்போய் சேர்ந்தனர்.