அதிமுகவை காப்பாற்ற தியாகம் செய்யத்தான் வேண்டும்.. ஆர். பி. உதயகுமார் தடாலடி
அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தியாகம் செய்துதான் ஆக வேண்டும் என்று அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கூறியுள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கட்சியை காப்பாற்ற அனைவரும் தியாகம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா அணி என்றும் ஓபிஎஸ் அணி என்றும் பிரிந்து செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக அம்மா கட்சி இரண்டாக உடைந்துள்ளது. அமைச்சர்கள் அனைவரும் தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக நிதி அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார்.
கட்சி வலுப்படுத்த..
இந்நிலையில், சென்னை எழிலகத்தில் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தினகரன் கட்சியில் ஒதுக்கப்பட்டது என்பது தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் அனைவராலும் ஒன்று சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவு. அதிமுக அம்மா அணியை வலுப்படுத்தவும் ஒன்றுமைப்படுத்தவும் குழு அமைக்கப்பட்டு அவர்கள் எடுக்கும் முடிவின் அடிப்படையில் செயல்படுவோம்.
தினகரன்
இப்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் அனைத்துமே அடிமட்ட தொண்டர்களின் எண்ணத்தின் அடிப்படையில்தான். கட்சிக்குள் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அதன் அடிப்படையில்தான் தினகரன் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தியாகம்
கட்சியை காப்பாற்ற அனைவரும் தியாகம் செய்ய வேண்டும். அந்தத் தியாகத்தைச் செய்ய நான் உள்பட அனைவரும் தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் மக்களிடம் சென்று சேரும்.
இரட்டை இலை
மேலும், கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும். இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க வேண்டும். ஆட்சியின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்காக நாங்கள் எல்லோரும் அனைத்துவித தியாகங்களையும் செய்ய தயார் என்று அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கூறினார்.