உட்கார சீட் கூட தரவில்லை போலீஸார்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆவேசம்
மதுரை: கையெழுத்துப் போன இடத்தில் தனக்கு உட்கார சீட் கூட போலீஸார் தரவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கோபத்துடன் கூறியுள்ளார்.
சென்னை கோர்ட்டின் முன்ஜாமீன் நிபந்தனைப்படி இன்று மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்திட்டார் இளங்கோவன். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அப்போது இளங்கோவன் கூறுகையில், கொலை மிரட்டல் தொடர்பாக ஒரு பொய் புகாரின் அடிப்படையில் என் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த புகார் குறித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் காரணமாக போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வந்துள்ளேன்.
ஹோட்டலில் தங்கி இருந்த என்னிடம் போலீஸ் அதிகாரி, அதிமுகவினர் உங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தற்போது செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். போலீசார் எனக்கு பாதுகாப்பு தரவில்லை. அதுபற்றி எனக்குக் கவலை இல்லை. அதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
போராட்டத்தில் ஈடுபடும் அதிமுகவினரை தடுத்து நிறுத்துவதை விடுத்து, என்னை தடுப்பதிலேயே போலீசார் குறியாக இருந்தனர். இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக வர நேரிட்டது. போலீசார் நினைத்திருந்தால் ஒரு நிமிடத்தில் அதிமுகவினரை அப்புறப்படுத்திவிட்டு எனக்கு பாதுகாப்பு கொடுத்திருக்க முடியும். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை.
போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட சென்ற எனக்கு, அங்கிருந்த இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், ஒரு நாற்காலி கூட தரவில்லை. காலம் ஒரு நாள் மாறும். மதுரை போலீசாரின் பாதுகாப்பு குளறுபடி குறித்து உயர்நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக தெரிவித்தார் இளங்கோவன்.