வேட்டி அணிந்து வந்த மாணவருக்கு தேர்வெழுத தடை.. மதுரையில் பரபரப்பு
மதுரையில் பருவத் தேர்வுக்கு வேட்டி அணிந்து வந்த மாணவருக்குத் தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மதுரை: வேட்டி கட்டி வந்த மாணவருக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கல்லனை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தொலைநிலை கல்வி மூலம் 2013-ம் ஆண்டில் பி.எஸ்.சி நூலக அறிவியல் பாடத்தில் சேர்ந்திருந்தார். இந்நிலையில் தொலை தூர கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான இந்தாண்டு பருவ தேர்வு இன்று மதுரையில் பல மையங்களில் நடைபெற்றது.
|இதனிடையே மதுரை அரசரடியில் உள்ள இறையியில் கல்லூரி தேர்வு மையத்தில் மாணவர் கண்ணனுக்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. மாணவர் கண்ணன் வேட்டி கட்டிக் கொண்டு தேர்வு எழுத வந்தார். காலை பத்து மணிக்குத் தேர்வறையில் தயாராக அமர்ந்திருந்த கண்ணனை, அங்கு வந்த தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், வேட்டி கட்டிக்கொண்டு தேர்வு எழுத அனுமதியில்லை என்று கூறி கண்ணணை வெளியேற்றினார்கள்.
அப்போது கண்ணன், கண்காணிப்பாளர்களிடம் வாக்குவாதம் செய்தார். ஆனாலும் அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து தேர்வு மைய அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். பின் இந்த சம்பவம் ஊடகங்களில் ஒளிபரப்பாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக அதிகாரிகள், உடனே தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு கண்ணனை தேர்வெழுத அனுமதிக்குமாறு உத்தரவிடப்பட்டனர். சுமார் 1 மணிநேர போராட்டத்துக்கு பின் கண்ணன் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தேர்வு எழுத ஒரு மணிநேரம் கூடுதலாக வழங்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.