46 நர்ஸ் விடுதலை ஓ.கே.. 9 நீலகிரி நர்சுகள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்..?

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிடியில் திக்ரித் நகரம் வந்தபோது, அங்குள்ள மருத்துவமனையில் பணியாற்றிய 45 கேரள நர்சுகள் மற்றும் ஒரு தூத்துக்குடி நர்ஸ் ஆகிய 46 பேரும் தீவிரவாதிகள் பிடியில் சிக்கினர். அவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டு இன்று இந்தியா திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் ஈராக்கின் பாஸ்ரா உள்ளிட்ட பிற நகர மருத்துவமனைகளில் வேலை பார்க்கும், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 9 நர்சுகளின் நிலைமை குறித்து அவர்கள் பெற்றோர் கவலை தெரிவிக்கிறார்கள். சண்டை நடைபெறும் பகுதியில் இருந்து இவர்கள் பணியாற்றும் இடம் பல நூறு கிலோமீட்டர் தொலைவிலுள்ளபோதிலும், பெற்றோருக்கு அச்சம் அகலவில்லை.
எந்த நேரத்திலும் அந்த நகரங்களையும் தீவிரவாதிகள் கைப்பற்றினால் தங்களது மகள்கள் நிலை என்னவாகும் என்ற கவலையில் நீலகிரி மாவட்டத்து நர்சுகளின் குடும்பத்தார் உள்ளனர். பஸ்ரா நகரில் பணியாற்றும் அலீனா என்ற நர்ஸ் நேற்று தனது தாய் கிரேசி ஜோசுக்கு போன் செய்துள்ளார். அப்போது, தாங்கள் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இந்தியா திரும்ப தாங்கள் விரும்பியபோதிலும், ஈராக் அரசு அதிகாரிகள், இம்மாத இறுதியில்தான் தங்களை இந்தியா அனுப்ப சம்மதித்துள்ளதாக கூறியுள்ளார். இதனால் இம்மாத இறுதிவரை பயத்தோடு வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை அந்த நர்சுகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதில் இந்தியா தலையிட்டு உடனடியாக நீலகிரி நர்சுகளை தாயகம் திரும்ப வழி செய்ய வேண்டும் என்று நர்சுகளின் பெற்றோர் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications