நீர் இல்லாமல் பயிர்கள் கருகி நாசம்… டெல்டா மாவட்டத்தில் மேலும் விவசாயி விஷம் குடித்து தற்கொலை
தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியுள்ளதால் டெல்டா மாவட்டத்தில் மேலும் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவாரூர்: காவிரியில் இருந்து நீர் வராததாலும், மழை பொய்த்துள்ளதாலும் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மனம் உடைந்த திருவாரூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவாரூர் அருகே முசிறியம் கிராமத்தில் வசித்து வருகிறார் சேகர். 50 வயதான இவர் ஒரு விவசாயி. சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்திருந்தார். இந்நிலையில், காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிடாததாலும், மழை சரிவர பெய்யாததாலும் பயிர்கள் கருகி நாசமாகியுள்ளன.
இதனால், மனம் உடைந்து போன விவசாயி சேகர் பயிர்களுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்தில் ராஜகுமாரன் என்ற விவசாயி விவசாய காப்பீட்டுத் தொகை கட்ட முடியாத கவலையில் மாரடைப்பால் மரணமடைந்தார். இந்நிலையில், திருவாரூரில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்துக் கொண்டது டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை, விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டதால் 22 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.