கொடைக்கானல் மலையில் எரியும் காட்டு தீ: அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் நாசம்
திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தொடர்ந்து எரியும் காட்டுத் தீயால் 500 ஏக்கர் பரப்பளவில் உள்ள மரங்கள், மூலிகைச் செடிகள் நாசமாகி வருகின்றன. காட்டு தீயை அணைக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மலைப் பகுதிகளில் உள்ள மரங்கள், செடிகள் காய்ந்து வருகின்றன. காற்றின் வேகத்தின் காரணமாக அவற்றில் காட்டுத் தீ கொழுந்து விட்டு எரிகிறது.
கடந்த ஒரு மாதமாக டம்டம் பாறை, குருசடி, வடகவுஞ்சி, சிட்டி வியூ, பெரும்பாறை, தாண்டிக்குடி, கடுகுதடி, உள்ளிட்ட வனப் பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருகிறது. இந்த நிலையில், பெருமாள்மலை வனப் பகுதியில் இரண்டு நாள்களாக காட்டுத் தீ பற்றி எரிகிறது.
இதனால் வனப்பகுதியில் உள்ள விலை உயர்ந்த தேக்கு, பலா உள்ளிட்ட மரங்களும் அரிய வகை மூலிகை செடிகளும் எரிந்து நாசமாகியுள்ளது. தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீயினால் அந்த பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வன விலங்குகளான காட்டெருமை, முயல், அணில் மற்றும் அரிய வகை பறவைகள் இடம் பெயர்ந்து வருகின்றன.