“ஆத்தாடி.. என்ன இது?” - ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான பூச்சிகள் - ஆனைமலை காட்டில் ஓர் அதிசய நிகழ்வு!
ஆனைமலை: கோவை மாவட்டம் ஆனைமலை வனப் பகுதியில் கோடிக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் சீரியல் பல்ப் போட்டது போல மின்னிய அதிசய நிகழ்வு சமீபத்தில் நடந்துள்ளது.
'அவதார்' திரைப்படத்தில் வரும் பண்டோரா கிரகத்தைப் போல ஆனைமலை இரவில் மின்னிய காட்சி பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிசய நிகழ்வு குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. இந்நிகழ்வு அப்பகுதி நல்ல நிலையில் இருப்பதை உணர்த்துவதாக சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மின்னும் பூச்சிகள்
மின்மினிப்பூச்சிகள், மினுக்கு பூச்சி, மின்னுட்டாம் பூச்சி, பிளிங்கி, விளக்கு பூச்சி போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றன. இவை வெளிர் மஞ்சள், பச்சை கலந்த மஞ்சள், இளஞ்சிவப்பு கலந்த பச்சை, சிவப்பு, ஆரஞ்சு மற்றும் நீல நிறங்களில் ஒளியை உமிழ்கின்றன.
மின்மினிப் பூச்சிகள் ஒருவித வேதிவினையை தமது உடலில் உருவாக்குவதன் காரணமாக ஒளி வெளிப்படுகிறது. பெரும்பாலும் தங்களது இரை மற்றும் துணையைக் கவர்வதற்காகவும், எதிரிகளை எச்சரிப்பதற்காகவும் ஒளியை உமிழ்கின்றன.

விஷத்தன்மை
மின்மினிப் பூச்சிகள், விஷத்தன்மை கொண்டவை. மின்மினிப் பூச்சிகள் மனிதர்களைக் கடித்தால் பல மணி நேரங்களுக்கு நாக்கு மரத்துப்போகும் எனக் கூறப்படுகிறது. சில நேரங்களில் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்.
பொதுவாக மின்மினிப் பூச்சிகள் ஈரப்பதம் நிறைந்த வெப்ப மண்ட பிரதேசங்களில் வாழ்பவை. வனப்பகுதிகள் குகைப் பகுதிகளிலும், நீர்நிலைகளிலும் காணப்படுகின்றன. காலமாற்றத்தில் மின்மினிகள் குறைந்து வருகின்றன.

மின்னிய காடு
இந்நிலையில், சமீபத்தில் கோவை மாவட்டம் ஆனைமலை வனப் பகுதியில், மின்மினிப் பூச்சிகள் கூட்டமாக ஒளியைச் சிதறவிட்டு மின்விளக்குகள் போல அப்பகுதியையே அலங்கரித்துள்ளன. இக்காட்சியை ஒளி மாசுபாடு மற்றும் மின்மினிப் பூச்சிகள் ஆராய்ச்சி நிபுணர் ஸ்ரீராம் முரளி புகைப்படம் எடுத்துள்ளார்.
காடு முழுவதும் கோடிக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் மின்னிக் கொண்டிருந்துள்ளன. ஒரு மரத்தில் ஒளி மின்னியதை தொடர்ந்து ஒவ்வொரு மரமாக லைட் போட்டதை போன்று, மின்மினிப் பூச்சிகள் ஒளிர ஆரம்பித்து காடே சீரியல் பல்ப் கட்டியதைப் போல இரவில் மின்னியுள்ளது.

மின்மினி நடனம்
இந்த நிகழ்வு மின்மினி பூச்சிகளின் ஒத்திசைவு நடனம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக, ஆனைமலை வனப்பகுதியில் 1999 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் இதேபோல மின்மினி பூச்சிகளின் ஒத்திசைவு நடனம் நடந்துள்ளது. மின்மினிப் பூச்சிகள் உலகம் முழுவதும் அருகி வரும் சூழலில் இந்த நிகழ்வு சூழலியலாளர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மின்மினிப் பூச்சிகளின் ஒத்திசைவு நடனம், வனப்பகுதியில் சுற்றுச்சூழல் ஆரோக்கியமானதாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது என்றும் சூழலியலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications