மீன் நிறைய வருது.. ஆனால் விலை இல்லையே.. சோகக் கடலில் மீனவர்கள்!
தூத்துக்குடி: தூத்துக்குடி கடல் பகுதியில் மீன்வரத்து அதிகரித்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் போதுமான விலை இல்லாததால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கடலோர மாவட்டமான தூத்துக்குடியில் இரண்டாவது முக்கிய தொழிலாக மீன்பிடி தொழில் இருந்து வருகிறது. வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான கடற்கரை பகுதியில் மீனவர்கள் அதிக அளவில் வசித்து வருகி்ன்றனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும், ஆயிரம் விசைப்படகுகளும் உள்ளன.
மீன்பிடி தடைகாலம் முடிந்துள்ள நிலையில் மீனவர்கள் உற்சாகமாக மீன்பிடி தொழில் செய்து வருகி்ன்றனர். தற்போது ஆழ்கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் மீன்கள் கிடைத்து வருவதால் மீனவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தருவைகுளத்தில் தங்குமடல் மீன்பிடி தொழில் நடக்கிறது. இங்குள்ள மீனவர்கள் கடலில் 7 முதல் 10 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்து கரை திரும்புகின்றனர். இங்கு தடைகாலம் முடிந்து தற்போது மீனவர்கள் கடலுக்கு சென்ற நிலையில் மீன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் வெறிச்சோடி காணப்பட்ட மீன் ஏல கூடம் மீண்டும் களைகட்ட தொடங்கியுள்ளது.
விசைப்படகு மூலமாக பிடிக்கப்பட்ட கெளவலை, வரிசூரை, பேத்தைசூரை, பெல்ட், திருக்கை, பனறிகோலா போன்ற பெரிய வகை மீன்கள் ஏல கூடத்திற்கு வருகின்றன. நாட்டு படகுகளில் கட்டு முறல், விளமீன் கிளமீன், செந்நகரை, கலப்பு மீன்களுடன் கரை திரும்புகின்றனர். இந்தளவுக்கு மீன்கள் அதிக அளவு கிடைத்தும் மறற நாட்களை விட விலை குறைந்து ஏலம் போவதால் மீனவர்கள் கவலையில் உள்ளனர்.
தடை காலத்தில் அதிக விலைக்கு சென்ற கட்டமுறல் கிலோவுக்கு ரூ.45 குறைந்து ரூ.200க்கும், விளமீன் கிலோவுக்கு ரூ.100க்கும் விற்கப்படுகின்றன. இருந்த போதிலும் இன்னும் சில காலங்களில் கேரளாவில் மீன்பிடி தடை காலம் தொடஙகுவதால் அங்குள்ள வியாபாரிகள் இங்கு வருவார்கள் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.