இலங்கையின் அடாவடி சட்டத்திற்கு எதிர்ப்பு.. நாளை முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. தமிழக மீனவர்களை தாக்குவதும், வலைகளை சேதப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது. இதன் உச்சமாக கடந்த மார்ச் மாதம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தில், எல்லை தாண்டி மீன்பிடிப்பவர்களுக்கு குறைந்தபட்சம் 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதிகபட்சமாக 20 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன் படிக்கப்பட்டாலும் அபராதம் விதிக்க சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு ராமேஸ்வரம் மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, ராமேஸ்வரத்தில் இன்று நடைபெற்ற மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
நாளை முதல் காலவரைற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று, அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோிக்கை நிறைவேறாவிட்டால், மத்திய தலைமை தபால் அலுவலகம் முன்பு ஜூலை 14ல் தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications