தீக்கிரையான சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்க குழு அமைப்பு... அமைச்சர் தகவல்!
சென்னை: முற்றிலும் தீக்கிரையான தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிப்பது குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார். தலைமை பொறியாளர் ஜெய்சிங் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து தற்போது வரை நீடித்து வருகிறது. இந்த தீ விபத்தில் கடையில் 7 தளங்களும் முற்றிலும் தீக்கிரையானது.
வெப்பத்தின் உக்கிரத்தை தாங்க முடியாமல் கட்டடத்தின் பல பகுதிகள் திடீர் திடீரென இடிந்து விழுகிறது. கடையில் எதையும் மிச்சம் வைக்கமால் அக்னி பிழம்புகள் சாம்பலாக்கியுள்ளன.

உறுதியை இழந்த கட்டடம்
24 மணி நேரத்திற்கும் மேலாக தீப்பிழம்புக்குள் சிக்கியதால் கட்டடம் தனது உறுதி தன்மையை இழந்துள்ளதாக தெரிகிறது. அதனாலேயே கட்டடம் தாக்குபிடிக்க முடியாமல் சரிந்து விழுகிறது.

கட்டடத்தை விட்டுவைப்பது ஆபத்து
தீயை அணைத்தாலும் ஸ்திரத் தன்மையை இழந்த கட்டடத்தை விட்டு வைப்பது ஆபத்து என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயக்குமார் இன்று சென்னை சில்க்ஸ் பகுதியில் ஆய்வு செய்தார்.

இடிக்க ஐவர் குழு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தீ விபத்தால் முற்றிலும் சேதமடைந்த சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கப்படும் என தெரிவித்தார். கட்டடத்தை இடிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஜெய்சிங் தலைமையில் 5 பொறியாளர்கள் கொண்ட ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்டடங்களுக்கு பாதிப்பு வராமல்..
சென்னை சில்க்ஸ் அருகில் உள்ள கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் கட்டடம் இடிக்கப்படும் என்றும் அவர் கூறினார். எந்த தொழில்நுட்பத்தை கொண்டு கட்டடம் இடிக்கப்படும் என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் ஆர்பி உதயக்குமார் கூறினார்.

அரசு சார்பில் இடிப்பு
தமிழக அரசின் சார்பில் கட்டடம் இடிக்கப்படும் என்றும் அவ்ர கூறினார். வெடிப்பொருட்கள் வைத்து கட்டம் இடிக்கப்படாது என்றும் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்தார். ஆய்வுப் பணிகள் முடிந்த பின்பு கட்டம் இடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications