மீண்டும் கனமழை... சென்னை சாலைகளில் மீண்டும் ‘படகு போக்குவரத்து’ தொடக்கம்
சென்னை: கனமழையைத் தொடர்ந்து மீண்டும் சென்னை புறநகர் பகுதிகளில் குடியிருப்போரை படகு மூலம் மீட்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் கடந்த வாரம் தொடர்ந்து கனமழை பெய்ததால், சாலைகளில் மழை நீர் வெள்ளமென ஓடியது. புறநகர் பகுதிகளில் வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் மழை சற்று குறைந்ததைத் தொடர்ந்து மழை நீர் வடியத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மீண்டும் மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கினர்.
மீண்டும் மழை...
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. பகலில் வெயிலும், மழையும் என வானிலை மாறி மாறி உள்ளது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி மீண்டும் குடியிருப்புப் பகுதிகளில் நீர் புகுந்துள்ளது.
வாகன ஓட்டிகள் சிரமம்...
சாலைகளிலும் மழை நீர் வெள்ளமென ஓடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மீட்புப் பணி...
சென்னை மேற்குத் தாம்பரம் பகுதியில் வீடுகளுக்குள் சிக்கியுள்ள மக்களை தீயணைப்புத் துறையினர் படகுகள் மூலம் மீண்டும் மீட்கும் பணியைத் தொடங்கியுள்ளனர்.
மக்கள் கவலை...
வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பழுதான வாகனங்கள், தண்ணீர் மோட்டார், டிவி, பிரிட்ஜ் போன்றவற்றை ரிப்பேர் செய்து இப்போது தான் மீண்டும் அப்பகுதி மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியிருந்தனர். இந்த நிலையில், மீண்டும் மழை நீர் சூழ்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேறும் வேதனையில் அவர்கள் உள்ளனர். மீண்டும் எங்கே செல்வது, பழுதான பொருட்களை சரி செய்ய மீண்டும் பணம் தேவைப்படுமே என்ற கவலை அவர்கள் அனைவரது முகத்தில் காணப்படுகிறது.