டெங்கு காய்ச்சலுக்கு தொடர்ச்சியாக 4 குழந்தைகள் பலி – திருப்பூரில் சோகம்
திருப்பூர்: திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு நான்கு குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி 23 ஆவது வார்டு பகுதியிலுள்ள சூர்யா காலனியைச் சேர்ந்த மனோகரன். இவருடைய மகள் சுபலட்சுமி, கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்த மயில்சாமியின் மகள் பிருந்தா ஆகியோர் டெங்குக் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அதே வார்டுக்கு உள்பட்ட ஆர்.கே.ஜி. நகரைச் சேர்ந்த சுந்தர்ராஜின் மகன் சுரேஷ் என்ற சிறுவனும் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 28 ஆம் தேதி உயிரிழந்தார்.
டெங்கு காய்ச்சலால் தொடர் உயிரிழப்பு ஏற்பட்டதையடுத்து ஆத்திரமடைந்த 23ஆவது வார்டு பொதுமக்கள், கடந்த 29 ஆம் தேதி கருமாரம்பாளையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, சுகாதாரத்துறை மூலமாக அப்பகுதியில் உடனடியாக மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் 50 ஆவது வார்டுக்கு உள்பட்ட வெள்ளியங்காடு, ஈஸ்வரமூர்த்தி நகரைச் சேர்ந்த செந்தில்,கெளசல்யா தம்பதியின் மகள் தனலட்சுமி கடந்த 3 நாள்களாக டெங்குக் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி உயர் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் அங்கிருந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அச்சிறுமி ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார். டெங்கு தாக்குதலால் நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் திருப்பூர் நகரில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.