அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு - பலத்த பாதுகாப்பு
அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம், புதுச்சேரியின் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டசபைத் தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
தஞ்சாவூர்: தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம், புதுச்சேரியில் நெல்லித் தோப்பு ஆகிய நான்கு சட்டசபைத் தொகுதிகளுக்கு நவம்பர் 19ம் தேதி இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி ஆகிய 4 தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கை கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி வெளியானது. இந்தத் தேர்தலில், திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். திருப்பரங்குன்றத்தில் மாம்பழம் சின்னம் ஒதுக்காததால் அந்த தொகுதியில் பாமக போட்டியிடவில்லை.
4 தொகுதிகளிலும் அனல் பறந்த பிரச்சாரம் வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. பிரச்சாரம் முடிந்ததையடுத்து, மாலை 5 மணிக்குமேல் வெளியாட்கள் அனைவரும் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தொகுதியில் உள்ள திருமண மண்டபங்கள், சமூக நலக் கூடங்கள், விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தி, வெளியாட்களை வெளியேற்றினர்.
களத்தில் வேட்பாளர்கள்
அரவக் குறிச்சியில் அதிமுகவின் வி.செந்தில்பாலாஜி, திமுகவின் கே.சி.பழனிச்சாமி உட்பட 39 வேட்பாளர் களும், தஞ்சையில் அதிமுகவின் ரெங்கசாமி திமுகவின் அஞ்சுகம் பூபதி உட்பட 14 பேரும், திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ், திமுகவின் சரவணன் உட்பட 28 வேட்பாளர் களும் களத்தில் உள்ளனர். நெல்லித்தோப்பில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் உள்ளிட்ட 8 பேர் களத்தில் உள்ளனர்.
ராஜேஷ் லக்கானி
வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர், அரவக்குறிச்சியில் 245, தஞ்சையில் 276, திருப்பரங்குன்றத்தில் 291 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. நாட்டில் முதல்முறையாக இந்தத் தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
27 பேர் கைது
தேர்தல் தொடர்பாக திருப்பரங்குன்றத்தில் 76 புகார்கள் உட்பட மொத்தம் 127 புகார்கள் வந்துள்ளன. இதில் 39 புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார் ராஜேஷ் லக்கானி.
ஏற்பாடுகள் தயார்
வாக்குச்சாவடி அலுவலர்கள், நுண்பார்வையாளர்கள் என அரவக்குறிச்சியில் 1,482, தஞ்சையில் 1,807, திருப்பரங்குன்றத்தில் 1,745 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 3 தொகுதிகளிலும் 812 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1,593 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதுதவிர, 122 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 240 மின்னணு இயந்திரங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
கண்காணிப்பு தீவிரம்
வாக்குப்பதிவு முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. அரவக்குறிச்சியில் 96, தஞ்சையில் 275, திருப்பரங்குன்றத்தில் 254 என 625 வாக்குச்சாவடிகளில் இணைய வழி கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் தலா 39 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவு
வாக்குப்பதிவு நிலவரத்தை பொதுமக்கள் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை தமிழக தேர்தல் துறை இணையதளத்தில் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். 5 மணிக்கு மேல் வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என்று அவர் தெரிவித்தார்.
நெல்லித்தோப்பில் 144
நெல்லித்தோப்பில் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு தேர்தல் முடியும் வரை அமலில் இருக்கும் என்று ஆட்சியர் சத்யேந்தர சிங் தெரிவித்துள்ளார்.