பள்ளி திறக்கும் நாளில் இலவச பஸ் பாஸ்: அரசு உத்தரவு
திருநெல்வேலி: வரும் கல்வியாண்டில் இலவச பஸ் பாஸ் பள்ளி திறக்கும் நாளிலேயே 20 லட்சத்திற்கும் மேலான மாணவ, மாணவிகளுக்கு வழங்க அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் பஸ்பாஸ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நெடுந்தூரத்தில் இருந்து பள்ளி வரும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் அமுலில் இருந்து வருகிறது.
தமிழகத்தில் மொத்தம் 8 போக்குவரத்து கழகங்கள் மூலம் 22 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு பள்ளிகளில் 1 முதல் பிளஸ்டூ வரை பயிலும் மாணவர்கள், அரசு கல்லூரி மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்களும் இலவச பஸ் பாஸ் மூலம் பயன் அடைந்து வருகின்றனர்.
இந்த பஸ் பாஸ் திட்டத்தில் ஓவ்வொரு கல்வி ஆண்டு தொடக்கத்திலும் மாணவர்களிடம் புகைப்படம் மற்றும் பிற விபரங்களை பெற்று அவற்றை போக்குவரத்து கழகத்தில் தனியார் மூலம் தயார் செய்து வழங்குவதால் கால விரயம் ஏற்பட்டு வந்தது.
கல்வி ஆண்டு தொடங்கி அரையாண்டு தேர்வு வரை பல பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் சென்று சேர்வதில்லை. இதனால் பலரின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடன் வாங்கி பஸ் ஏற்றி விடுகின்றனர்.
இந்த காரணத்தினால் பலர் பள்ளி படிப்பை இடை நிறுத்தமும் செய்து விடுகின்றனர். இதை தவிர்க்க வரும் கல்வி ஆண்டில் பள்ளி திறக்கும் நாளான ஜூன் 2ம் தேதியே மாணவர்கள் பஸ் பாஸில் பயணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக பழைய மாணவர்களாக இருந்தால் அவர்களது பழைய கார்டை புதுப்பித்து பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் கல்வி ஆண்டில் இந்த பஸ் பாஸ் மூலம் 30 லட்சத்திற்கும் மேலான மாணவ, மாணவிகள் பயன் பெற உள்ளனர். இதற்காக புகைப்படத்துடன் கூடிய ஸ்மார்க் கார்டாக பஸ் பாஸ் தயாரிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.