இலங்கையிலிருந்து வந்த 5 மீனவர்களுக்கு தமிழக அரசு தலா ரூ.3 லட்சம்
ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து தூக்கு தண்டனை ரத்தாகி தமிழகம் திரும்பி உள்ள 5 மீனவர்களும் சொந்த தொழில் துவங்குவதற்காக தமிழக அரசு சார்பில் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்திய வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் உள்ளிட்ட 5 மீனவர்களும் கொழும்பில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை 5.30 மணிக்கு டெல்லி வந்தடைந்தனர். நேற்றிரவு அவர்கள் டெல்லியில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் அவர்களை அமைச்சர்கள் பா.வளர்மதி, ஜெயபால், டாக்டர் சுந்தர்ராஜ் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் வரவேற்றனர். பிறகு 5 மீனவர்களும் இன்று காரில் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் ஊர் செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தமிழக அரசே செய்திருந்தது.
அதன்படி 5 மீனவர்களும் சென்னையில் இருந்து தங்கச்சி மடத்துக்கு அரசின் செலவில் சென்று சேர்ந்தனர்.
இதற்கிடையே 5 மீனவர்களும் கடந்த சுமார் 3 ஆண்டுகளாக சிறையில் இருந்ததால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தது. எனவே அவர்கள் 5 பேரும் புதிய வாழ்க்கை தொடங்க தேவையான உதவிகள் செய்து கொடுக்க தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி 5 மீனவர்களுக்கும் தலா ரூ.3 லட்சம் தமிழக அரசு கொடுத் துள்ளது. இதற்கான காசோலையை நேற்றிரவே அந்த 5 மீனவர்களிடமும் அமைச்சர்கள் வளர்மதி, ஜெயபால், சுந்தர்ராஜ் ஆகியோர் வழங்கினார்கள்.
தமிழக மீனவர்கள் 5 பேரும் இலங்கை சிறையில் வாடிய போது அவர்களது குடும்பத்துக்கு எல்லா உதவிகளையும் தமிழக அரசு செய்தது. இப்போது அந்த 5 மீனவர்கள் குடும்பத்தினர் புதிய வாழ்க்கை தொடங்க மீண்டும் தமிழக அரசு நிதி உதவி செய்துள்ளது.
தமிழக அரசின் இந்த தொடர் முயற்சிகள் மற்றும் நிதி உதவிகள் தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக மீனவர்கள் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் உள்ள தங்கச்சி மடத்துக்கு வந்தடைந்த மீனவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மூன்றாண்டுகளுக்குப் பின்னர் தங்களின் சொந்த மண்ணையும், குடும்பத்தினரையும் உறவினர்களையும் பார்த்தபோது உற்சாகமாக இருப்பதாக 5 மீனவர்களும் தெரிவித்தனர். மரணத்தில் இருந்து மீண்டு வருவோம் என்று தாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்று கூறிய மீனவர்கள், போதைப்பொருள் வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொள்ள வலியுறுத்தி, இலங்கை காவல்துறையினர் தங்களை கை, கால்களை கட்டி அடித்து உதைத்து சித்தரவதை செய்ததாகவும் தெரிவித்தனர்.