கப்பலோட்டிய தமிழனின் பேரன் மருத்துவ சிகிச்சைக்கு கப்பல்துறை அமைச்சர் வாசன் உதவிக்கரம்
இதுகுறித்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சுதந்திரப் போராட்டத் தியாகி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், அவரது முழு உருவச் சிலையை தூத்துக்குடி துறைமுக நுழைவு முற்றத்தில் அமைத்து மகிழ்ந்தது துறைமுக நிர்வாகம். சிங்கமென வெள்ளையரை எதிர்த்துக் களம் பல கண்ட அந்தத் திருமகனின் திருப்பெயரும் தூத்துக்குடி துறைமுகத்துக்கு சூட்டப்பட்டது.
இந்நிலையில், வ.உ.சிதம்பரனாரின் பேரன்களில் ஒருவரான விளாத்திகுளம் வட்டத்துக்குட்பட்ட சின்னூர் கிராமத்தில் வசிக்கிற அ. சங்கரலிங்கம் (80), இதய நோயால் பாதிக்கப்பட்டு தொடர் மருத்துவ பரிசோதனை செய்வதற்கு போதிய பொருளாதார வசதி இல்லாமல் இருப்பதாக செய்தி வெளியாகியிருந்தது.
இதை அறிந்து மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் அளித்த ஆணையின்படி, சங்கரலிங்கத்தின் மருத்துவ சிகிச்சைக்காக வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் சார்பில் ரூ.2 லட்சம் வழங்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.