நான் தேர்தலில் போட்டியிடவில்லை.. ஜி.கே.வாசன் அதிரடி அறிவிப்பு
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்காக தீவிரமாகப் பாடுபடப் போகிறேன் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், காங்கிரஸுடன் கூட்டணி வைக்க விரும்பாதவர்கள் தேர்தலுக்குப் பின்னர் வருந்துவார்கள், இது உறுதி என்றும் வாசன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வாசன் பேசுகையில், தமிழகத்தி்ல் காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரமான, கணிசமான வாக்குவங்கிகள் இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் காங்கிரசார் உற்சாகமாக இருக்கிறார்கள்.
தமிழகத்தில் பதவிக்காக சந்தர்ப்பவாத கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி பற்றி தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிட நல்ல சந்தர்ப்பம் அமைந்துள்ளது. மிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்து காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்கிற வகையில் எனது செயல்பாடு இருக்கும்.
எனது பிரசாரம் ஒரு தொகுதியில் மட்டும் முடங்கிவிடக்கூடாது என்பதற்காகவும், 39 தொகுதிகளிலும் சென்று கட்சித் தொண்டர்களை உற்சாகமூட்டி தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பதற்காவும் நான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
தேர்தல் வியூகம், பணி, வேட்பாளர் தேர்வு படிப்படியாக தொடங்கும். வேட்பாளர்கள் பட்டியலை தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வெளியிடுவார்.
வரும் 14ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் தேர்தல் குழுக் கூட்டம் நடைபெறும். காங்கிரஸ் கட்சியில் சேர்பவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. காங்கிரசுடன் கூட்டணி சேராதவர்கள் தேர்தலுக்கு பின் வருத்தப்படுவார்கள் என்றார் வாசன்.