அடக்கொடுமையே.. கஞ்சா வழக்கில் அதிமுக எம்எல்ஏ சகோதரருக்கு போலீஸ் வலைவீச்சு!
கஞ்சா வைத்திருந்த வழக்கில் உசிலம்பட்டி அதிமுக எம்.எல்.ஏ. நீதிபதியின் சகோதரர் செல்வத்தை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்
மதுரை: உசிலம்பட்டி அதிமுக எம்.எல்.ஏ. நீதிபதியின் (பெயரே நீதிபதிதான்) சகோதரர் செல்வம் மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்
அதிமுக எம்எல்ஏ நீதிபதியின், தந்தை வீட்டில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு போலீசார் கஞ்சா பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. ஆட்சியிலிருந்ததால் அப்போது தப்பித்துக்கொண்டிருந்த நீதிபதி மற்றும் அவரது சகோதரர் மீது ஆதாரத்துடன் வழக்கு பதிவு செய்ய போலீசார் காத்திருந்தனர்.
இந்நிலையில், மதுரை அருகே கணவாய்பட்டியில் 4.75 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக நீதிபதியின் சகோதரர் செல்வம் மற்றும் அவரது கூட்டாளி ரமேஷ் மீது போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக ரமேஷை கைது செய்தனர்.
இந்நிலையில் செல்வத்தை தீவிரமாக போலீசார் தேடி வரும் நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளார். எம்எல்ஏவின் குடும்பமே கஞ்சா விற்பனை செய்து போலீசாரிடம் சிக்கிக்கொண்டுள்ளது அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.