தேர்தல் நடத்தியே அதிமுக பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்… ஓபிஎஸ் மீண்டும் திட்டவட்டம்
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தியே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பெரியகுளம்: அதிமுகவில் தேர்தல் நடத்தியே பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்தார்.
சசிகலா அணியும், ஓபிஎஸ் அணியும் இணைவதற்கான சூழல் உருவாகியுள்ளதால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடந்த ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் ஓபிஎஸ் அணியில் உள்ள மாஃபா பாண்டியராஜன் இரு அணிகளும் இணைவது குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் சசிகலா அணியினர் பேச்சுவார்த்தைக்கு வந்தால் பேசுவோம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தினகரன் தரப்பில் இருந்து ஓபிஎஸ் அணி இணைவது குறித்து வரவேற்பை தெரிவித்துள்ளது.
வரவேற்பு
இரு அணிகளும் இணைவது குறித்து எப்போது எங்கே பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது என்றும் யார் யார் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தினகரன் தரப்பில் இருந்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்
கறார் ஓபிஎஸ்
இந்நிலையில், பெரியகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர் செல்வம், சசிகலா குடும்பம் கட்சியில் இருக்கக் கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். ஆர்.கே. நகரில் ஓட்டுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கியதையும் இரட்டை இலை சின்னத்தை லஞ்சம் கொடுத்து பெற தினகரன் முயன்றதையும் ஓபிஎஸ் தனது பேட்டயில் சுட்டிக் காட்டினார்.
ஜெ. மரணம்
மேலும், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக் கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள ஓபிஎஸ், அதிமுகவில் சசிகலா குடும்பம் இருக்கும்வரை இரு அணிகளும் இணைப்பு என்ற பேச்சிற்கே இடமில்லை என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார்.
பொதுச் செயலர் தேர்தல்
மேலும், அதிமுகவில் இணையதான் நிபந்தனை இல்லை என்ற சொன்னே தவிர சசிகலா குடும்பம் வெளியேறினால்தான் நாங்கள் உள்ளே வருவோம் என்றும் ஓபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுகவில் தேர்தல் நடத்தியே பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.