காங். தலைவராக நேரு குடும்பத்தைச் சாராத ஒருவரா? ப.சிதம்பரத்துக்கு ஜி.கே.வாசன் கடும் எதிர்ப்பு
சென்னை: காங்கிரஸ் கட்சியின் தலைவராக நேரு குடும்பத்தில் இல்லாத ஒருவர் பொறுப்பேற்பார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருந்ததற்கு மற்றொரு முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த ப.சிதம்பரம், சோனியாவும் ராகுலும் மக்களிடம் வெளிப்படையாக பல்வேறு விஷயங்கள் குறித்து பேச வேண்டும். சோனியா காந்தி நல்ல தலைவர்தான். எதிர்காலத்தில் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தார்.
ப.சிதம்பரத்தின் இக்கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் ப.சிதம்பரத்துக்கு எதிராக தொடர்ந்து கோஷ்டி அரசியலில் ஈடுபட்டு வரும் ஜி.கே.வாசன் வெளிப்படையாக சிதம்பரத்தின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வாசன், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் எந்த ஒரு காங்கிரஸ் தொண்டருக்குமே நேரு குடும்பத்தில் இல்லாத ஒருவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்காது என்று கூறியுள்ளார்.
ப.சிதம்பரத்துக்கு ஜி.கே.வாசன் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்திருப்பது காங்கிரஸ் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.