செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 15% மட்டுமே எட்டியுள்ளது.. பீதி வேண்டாம் மக்களே!
செம்பரம்பாக்கம் ஏரி 15 சதவீத நீர்மட்டத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 15 சதவீதத்தை மட்டுமே எட்டியுள்ளதாகவும் இதனால் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் அரசு கூறியுள்ளது.
சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்துவிடுமோ என்று மக்கள் அஞ்சி வருகின்றனர். ஆனால் ஏரியின் நிலைமை பாதுகாப்பானதாக இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஏரியின் நீர்மட்டம் 15 சதவீதத்தை மட்டுமே எட்டியுள்ளதால் மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் என்னவென்று பார்க்கலாம். 85.4 அடி உயரம் கொண்ட இந்த செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 364.5 கோடி கன அடி (3645 mcft) ஆகும். இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 70.85 அடியாக உள்ளது.
ஏரியில் 679 கோடி கன அடி அளவிற்கு நீர் உள்ளது (452 mcft). ஏரிக்கு 778 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து 60 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி இந்தப் பகுதியில் 1 சென்டிமீட்டர் அளவு மட்டுமே மழை பெய்துள்ளது.
சென்னை பூண்டி ஏரி மொத்த கொள்ளளவான 140 அடியில் 126.01 அடியாக குறைந்துள்ளது. சோழவரம் ஏரி மொத்த கொள்ளளவான 64.5 அடியில் 52.45 அடியை எட்டியுள்ளது.
செங்குன்றம் ஏரி மொத்த கொள்ளளவான 50.20 அடியில் 34 அடியை எட்டியுள்ளது. இதனைத் தவிர்த்து கொரட்டூர் அணைக்கட்டு பகுதியில் 4 சென்டிமீட்டர் மழையும், தாமரைப்பாக்கம் பகுதியில் 1.9 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.