ஜெ. மரணத்தில் 2ம் நாளாக விசாரணை... அரசு மருத்துவர்கள் ஆணையம் முன்பு ஆஜர்!
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் முன்பு 2 அரசு மருத்துவர்கள் விளக்கமளிக்க ஆஜராகியுள்ளனர்.
சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் முன்பு 2 அரசு மருத்துவர்கள் ஆஜராகியுள்ளனர்.
அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பலரும் சந்தேகம் கிளப்பினர். இதனையடுத்து இது குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் நேற்று விசாரணையைத் தொடங்கியது.
ஜெயலலிதாவின் கைரேகையில் சந்தேகம் எழுப்பிய திமுகவின் டாக்டர் சரவணனிடம் நேற்று விசாரணை தொடங்கியது. இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் சரவணன் விசாரணக் கமிஷன் முன்பு ஆஜராகியுள்ளார்.
இதே போன்று ஜெயலலிதா மரணம் குறித்து விளக்கமளிக்க ஆஜராகுமாறு 2 அரசு மருத்துவர்களுக்கு நீதிபதி ஆறுமுகசாமி நோட்டீஸ் அளித்திருந்தார். இதனையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் டீன் நாராயணபாபு மற்றும் மருத்துவத்துறை இயக்குனர் மயில்வாகனன் ஆகியோர் ஆணையத்தின் முன்பு ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான கேள்விகளை நீதிபதி ஆறுமுகசாமி எழுப்பி வருகிறார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேகம் எழுப்பி தர்மயுத்தம் தொடங்கிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இது வரை விசாரணை கமிஷன் முன்பு எந்த பிரமாணப் பத்திரத்தையும் அளிக்கவில்லை. இது அதிமுகவினர் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.