மறைந்தார் முதுபெரும் தமிழறிஞர் மா. நன்னன்!
திராவிட சிந்தனைகளில் ஊறியவரும் தமிழறிஞருமான மா. நன்னன் வயது முதிர்வு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
Recommended Video

சென்னை : திராவிட சிந்தனைகளில் ஊறியவரும் சுயமரியாதைத் தமிழறிஞரும், மூத்த அரசியல்வாதிகளின் நண்பருமான மா.நன்னன் வயது முதிர்வு காரணமாக சென்னையில் காலமானார்.
விருத்தாசலத்தை அடுத்த சாத்துக்குடல் என்னும் கிராமத்தில் பிறந்த மா.நன்னன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் உயர்நிலைப்பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக்கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகியவைகளில் பணிபுரிந்துள்ளார்.

மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, பின் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராக 11.2.1980 முதல் 31.5.1983 வரை பணியாற்றியவர். வயது வந்தோர் கல்வி வாரியத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். எழுத்தறிவித்தலில் நன்னன் முறை எனும் புதிய முறையை ஏற்படுத்தியவர்.
சென்னைத் தொலைக்காட்சியில் 17 ஆண்டுகள் எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் கற்பித்துள்ளார். பல பாடநூல்களையும் துணைப்பாடநூல்களையும் எழுதிய நன்னன், 1990-2010 காலகட்டத்தில் சுமார் எழுபது நூல்களை எழுதியுள்ளார். பெரியார் கொள்கைகளின் மீது பற்று கொண்ட இவர் பெரியார் கொள்கைகள் குறித்து பல நூல்களை எழுதியுள்ளார்.
இவர் எழுதிய "பெரியாரைக் கேளுங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமூகவியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. இவர் பெரியார் விருது, தமிழ்ச் செம்மல் விருது, திரு. வி. க. விருது போன்ற விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
94 வயதாகும் நன்னன் அண்மைக் காலமாக வீட்டில் இருந்து வெளியே செல்லமுடியாமல் சக்கர நாற்காலியில் தான் இயங்கி வந்துள்ளார். இந்நிலையில் வயோதிகம் காரணமாக அவர் இன்று காலையில் சைதாப்பேட்டையில் உள்ள வீட்டில் காலமாகியுள்ளார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும் வேண்மாள், அவ்வை என்ற மகள்களும் அண்ணல் என்ற மகனும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications