ஓ.. அப்படீன்னா எச்.ராஜா பேசியதில் தப்பே இல்லையா?
சென்னை: காவல் துறை குறித்தும் உயர்நீதிமன்றம் குறித்தும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா பேசிய பேச்சுகளில் பெரிய தவறு இல்லை என்று மறைமுகமாக.. இல்லை, இல்லை, நேரடியாகவே தமிழக அரசு தெரிவித்துவிட்டது.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பான பிரச்சினையில் போலீசார் மற்றும் மாநில உயர்நீதிமன்றம் குறித்து மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியுள்ளார் எச்.ராஜா.
இந்தப் பேச்சு வீடியோவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஹைகோர்ட் கண்டிப்பு
இதையடுத்து ராஜா மீது திருமயம் போலீஸார் 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஐகோர்ட் நீதிபதிகளிடம் நேற்று இது தொடர்பாக வழக்கறிஞர்கள் புகார் மனு அளித்தபோது, நீதிமன்றத்திற்கு எதிராக இவ்வாறான கருத்துக்களை கூறுவது பாசிசத்தை வளர்க்கும் என்று தெரிவித்தனர். ராஜாவை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் செய்திகள் வெளியாகின.
சிங்கமாம்
ஆனால் ராஜாவோ திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற இந்து முன்னணி அமைப்பின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார் எச்.ராஜா. அப்போது மாலை பத்திரிகையொன்றில் வெளியான, தலைமறைவு குறித்த செய்தியை பொதுக்கூட்டம் மேடையிலையே நிர்வாகி ஒருவர் தூக்கிப் பிடித்தபடி, "எங்கள் சிங்கம் இங்கே உட்கார்ந்திருக்கிறது, தலைமறைவு என்று செய்தி வெளியிட்டு உள்ளார்கள்" என்று காவல்துறைக்கு சவால் விடுக்கும் வகையில் பேசினார்.
சோபியா கைது
ஆனால் நேற்று இரவு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அளித்த பேட்டியில், எச்.ராஜா எஸ்.வி.சேகர் போன்றோரின் கருத்துக்கள் கைது செய்யப்படக் கூடிய அளவிற்கான பேச்சுக்கள் இல்லை என்று தெரிவித்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில், பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை பார்த்து கோஷம் போட்ட சோபியா என்ற மாணவி கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, அந்த கோஷத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ராஜா பேசியது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அளவுக்கான பிரச்சினை இல்லை என்று சமாளித்தார் பாண்டியராஜன்.
தப்பு இல்லை
பாண்டியராஜனின் இந்த பேட்டி என்பது எச்.ராஜாவை கைது செய்யப் போவதில்லை என்ற அரசின் நேரடி வாக்குமூலமாக பார்க்கப்படுகிறது. இதேபோல்தான் பலமுறை கோர்ட் உத்தரவிட்டும் கூட, எஸ்.வி.சேகரை காவல்துறை கைது செய்யவில்லை. திருமுருகன் காந்தி, சோபியா போன்றவர்களை எல்லாம் போலீசார் உடனே கைது செய்த போது, எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் விட்டு இருந்தீர்களே என்ற கேள்வியை மக்களும் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களும் எழுப்பிக் கொண்டிருந்தனர். இனிமேல் இந்த விஷயத்தில் ராஜாவையும் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் சேர்த்துக்கொள்ளப்போகிறார்கள்.
ராஜாக்களுக்கு ஒரு நியாயம்
இதன் மூலம் எந்த ஒரு கைது நடவடிக்கையை காவல்துறை எடுக்கும்போதும் எஸ்.வி.சேகர் மற்றும் ராஜா ஆகியோரை ஏன் கைது செய்யவில்லை என்ற கேள்வி முதலில் எழும். ராஜாக்களுக்கு ஒரு நியாயம் சாமானியர்களுக்கு ஒரு நியாயம் என்று இருப்பதற்கு இது மன்னராட்சி அல்ல, மக்களாட்சி என்பதை அவ்வப்போது அரசுக்கு மக்கள் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கப்போகிறார்கள்.