38 பேரை ‘நீட்’ தேர்வு எழுத அனுமதிக்காவிட்டால்... சிபிஎஸ்இ இயக்குநருக்கு.. ஐகோர்ட் எச்சரிக்கை
தாமதமாக நீட் தேர்விற்கு விண்ணப்பித்த 38 பேரை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாக 38 பேர் நீட் தேர்விற்கு விண்ணப்பித்தனர். இவர்கள் அனைவரையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இளநிலை படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயப்படுத்தியது,
இதனைத்தொடர்ந்து நடப்பு கல்வியாண்டிற்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 7-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு, அந்தத் தேர்வினை எழுத இணையதளத்தின் மூலம் அனைவரும் விண்ணப்பித்தனர். கடந்த மார்ச் 1-ம் தேதியுடன் விண்ணப்பம் செய்வதற்கான கால கெடு முடிந்தது.
கூடுதல் அவகாசம்
எனினும், 25 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை கூடுதலாக ஐந்து நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டனர். அதன்படி, ஏப்ரல் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நீட் நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர்.
வழக்கு
இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 38 பேர் இணையதளத்தின் மூலம் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும், தங்களை தேர்வு எழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.
விசாரணை
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வுக்கு தாமதமாக விண்ணப்பித்த 38 பேரை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தரவு
மேலும், நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாவிடில் சிபிஎஸ்இ இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி புஷ்பா எச்சரித்துள்ளார்.