செயல்படாத விசாரணை ஆணையங்களை கலைத்து விடுங்கள்.. ஹைகோர்ட் இன்னொரு அதிரடி
சென்னை: செயல்படாத விசாரணை ஆணையங்களை எதற்கு வைத்துள்ளீர்கள். வீணாக பணத்தை செலவு செய்வதற்குப் பதில் அவற்றை கலைத்து விடுங்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஏதாவது பிரச்சினைக்காக அமைக்கப்படும் விசாரணை ஆணையங்கள் மூலம் இதுவரை 99 சதவீதம் நீதி கிடைத்ததில்லை என்பதே வரலாறு. ஏதாவது அரிதாகத்தான் விசாரணை ஆணையங்கள் மூலம் மக்களுக்கு நல்லது நடந்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு மோதல், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, ஜெயலலிதா மரணம், புதிய தலைமைச் செயலகம் கட்டுமானப் பணியில் முறைகேடு என சில விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் இதுவரை எந்த ஆணையத்திலிருந்தும் அரசுக்கு பரிந்துரை ஏதும் சமர்ப்பிக்கப்படவில்லை. எல்லாமே விசாரணை அளவில்தான் உள்ளன.
குறிப்பாக புதிய தலைமைச் செயலகம், ஜல்லிக்கட்டு, ஜெயலலிதா மரணம் ஆகியவை தொடர்பான விசாரணை ஆணையங்கள் தொடர்ந்து விசாரித்தபடி உள்ளன. தூத்துக்குடி சம்பவமும் விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்ததாக அமைக்கப்பட்ட ரகுபதி கமிஷனை சென்னை உயர் நீதிணன்றம் கலைத்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, தடை விதிக்கப்பட்ட நிலையில் இத்தனை ஆண்டுகளாக அந்த கமிஷனுக்கு அலுவலகம், ஊழியர்கள் என்று பெரும் தொகையை அரசு ஏன் செலவு செய்கிறது. மக்களின் வரிப்பணம் ஏன் வீணாகிறது என்று கருத்து தெரிவித்தார். வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இன்று வழக்கு மீண்டும் ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது இடைக்காலத் தடையை நீக்க அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதை நிராகரித்த நீதிபதி, எஸ்.எம்.சுப்பிரமணியம், ரகுபதி ஆணையத்தை கலைத்து அதிரடியாக உத்தரவிட்டார்.
அடுத்து இன்னொரு அதிரடி உத்தரவையும் நீதிபதி பிறப்பித்தார். அதன்படி, தமிழகத்தில் இதுவரை செயல்படாத விசாரணை ஆணையங்கள் எவை என்பதை தமிழக அரசு கண்டுபிடித்து அவற்றை கலைக்க 4 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் விசாரணை கமிஷன் நீதிபதிகள் அரசு பங்களாக்களில் தங்கியிருந்து விசாரிப்பது சரியில்லை. அரசு பங்களாக்களை அவர்கள் காலி செய்துவிட்டு அரசு அலுவலகத்தை பயன்படுத்தி விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.