சினிமா நடிகர்களின் கிரிக்கெட் போட்டி... தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு!
சென்னை: சினிமா நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறி விட்டது.
ஹைதராபாத்தில், 'செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்' நிறுவனம், சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறது. இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு எதிராக விஜய் டி.வி. மற்றும் ஏசியா நெட் டி.வி. ஆகியவை தனித்தனியாக உயர்நீதிமன்றத்தின் மனு ஒன்றை தாக்கல் செய்தன.
அதில், ''கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கான ஸ்பான்சர் நிறுவனமாக கார்பன் மொபைல் நிறுவனம் செயல்பட்டது. இந்த போட்டியை நாங்கள் ஒளிபரப்பு செய்ததற்கான தொகையை இன்னும் எங்களுக்கு வழக்கவில்லை. எனவே, தற்போது ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும்'' என அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி மணிகுமார், நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார்.
இது தொடர்பான அவரது உத்தரவில், ''நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தடை விதிக்க முடியாது. மேலும், பணம் தொடர்பான பிரச்னை குறித்து பேச்சு வார்த்தை நடத்த உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மோகன்ராம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முன்பு இருதரப்பினரும் ஆஜராகி சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.