குன்னூரில் பலத்த மழை காரணமாக சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு - பொதுமக்கள் அவதி
குன்னூரில் பலத்த மழை காரணமாக சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னூர்: குன்னூரில் இடியுடன் பெய்த பலத்த மழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.
குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் முதல் பலத்த மழை பெய்ய துவங்கியது.
இடி - மின்னலுடன் 2 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்ததால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்களை ஓட்டுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
குன்னூர் கீழ் ராஜாஜி நகர் குடியிருப்பு பகுதியிலுள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் வீடுகள் சேறும், சகதியுமாக காணப்பட்டதுடன், வீட்டினுள் இருந்த பொருட்களும் சேதமடைந்தன. இதனால் கடும் அவதிக்கு உள்ளான அப்பகுதி மக்களே, மழைநீரை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மழை காரணமாக குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம், கே.என்.ஆர். நகர் ஆகிய இடங்களில் சாலையின் குறுக்கே 2 மரங்கள் விழுந்தன.
இதனால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. பின்னர் சாலையில் விழுந்த மரங்களை தீயணைப்பு துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேல் போராடி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.