சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை... ஜில்லான தலைநகரம்
சென்னையின் பல்வேறு பகுதியில் இரவில் விடிய விடிய பலத்த மழை கொட்டித்தீர்த்தது. பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
சென்னை: தமிழக தலைநகரான சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. தமிழக தலைநகரமே ஏசி போட்டது போல குளுமைக்கு மாறியுள்ளது.
கனமழையால் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரு நாள்களுக்குத் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கணித்திருந்தது. வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது போலவே கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. புதன்கிழமையன்று கொட்டித்தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது.
விடிய விடிய கனமழை
வியாழக்கிழமையன்று இரவு 7மணிக்கு மேல் மழை பெய்யத் தொடங்கியது பலத்த மழையாக மாறியது. அலுவலகம் விட்டு வீடு திரும்பியவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். தொடர்ந்து விட்டு விட்டு விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் வெள்ளநீர் முக்கிய சாலைகளில் தேங்கியது.
குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம்
சென்னையில் தாழ்வாக உள்ள பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. தேங்கிய மழை நீரினால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.
தொடர்மழை
சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தை யாராலும் மறக்க முடியாது. வர்தா புயல் லேசான மழையோடு கடந்து விட்டது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் சென்னையில் தொடர்மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
மழை நீடிக்கும்
தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த இரண்டு நாள்களுக்கு சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
பருவமழை அதிகம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென் மேற்கு பருவமழை இயல்பை விட 33 சதவீதம் அதிகம் பெய்துள்ளது என்று தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழையும் வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றிவிட்டது. இதனால் பல ஏரிகள் வறண்டு விட்டன. குடிநீர் பஞ்சமும் தலைவிரித்தாடியது. இந்த ஆண்டு பருவமழை கைகொடுத்தால் குடிநீர் பஞ்சம் தீரும் என்பது சென்னைவாசிகளின் நம்பிக்கை.