இடி மின்னலுடன் சென்னை, காஞ்சியில் கொட்டிய கனமழை: ஜில்லென்று மாறிய வானிலை
சென்னை: சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் நேற்றிரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பல பகுதிகளில் கொட்டி மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பரவலாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் சென்னையில் வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருந்தது. தென்மேற்கு பருவமழை வெப்பத்தை தணிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இடியுடன் கனமழை
இந்த நிலையில் நேற்றிரவு சென்னையில் இடியும், மின்னலுமாய் மழை கொட்டித் தீர்த்தது. மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, கோயம்பேடு, கொரட்டூர், எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கரைபுரண்ட வெள்ளம்
திருவள்ளூர் மாவட்டத்திலும் நேற்றிரவு இடியும் மின்னலுமாய் மழை கொட்டித்தீர்த்தது. திருத்தணி, ஆவடி சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் மழை கொட்டியது. இதனால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
நூறு அடி சாலையில் வெள்ளம்
சென்னையின் புறநகர் பகுதிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் கனமழை கொட்டியதால் வெப்பம் மறைந்து இன்று குளு குளு காற்று வீசுகிறது. திடீர் மழையால் சாலையில் வெள்ளநீர் தேங்கியது. வடபழனி 100 அடி சாலையில் நேற்றிரவு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விவசாயிகள் மகிழ்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம், திருவப்பூர், முள்ளுர்,ஆலங்குடி, உள்ளிட்ட தமிழகத்தின் வேறு சில பகுதிகளிலும், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால், அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை
கேரளத்தில் அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. வழக்கமாக இந்த பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கேரளாவில் மழை
இதனிடையே இடுக்கி மாவட்டம் முல்லைப்பெரியாறு அணைப்பகுதி மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளிலும் சாரல் மழை பெய்துள்ளது. இதன்மூலம் தென்மேற்கு பருவமழைக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.
இடியுடன் மழை பெய்யும்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 2 நாட்கள் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வுமைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார்.