சென்னையில் வெளுத்து வாங்கும் மழை: ரயில்கள் ரத்து - விமானங்கள் தாமதம்
சென்னை: சென்னையில் 15 மணிநேரத்திற்கும் மேலாக கொட்டிய கனமழையால் சாலைகளும், ரயில் தண்டவாளங்களும் வெள்ளக்காடக மாறியுள்ளன. இதனால் புறநகர் ரயில்களும், சில எக்ஸ்பிரஸ் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 26 விமானங்கள் தாமதமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் விடிய விடிய கொட்டிய மழையால் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் காலையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து திருத்தணி ரயில் நிலையத்தில் மின்சார ரயிலை மறித்து பயணிகள் மறியலில் ஈடுபட்டனர். சென்னை செல்லும் ரயில்கள் தினமும் காலதாமதமாக வருவதாக பயணிகள் புகார் கூறினர்.
சென்னையில் இருந்து திருத்தணி வந்து, மீண்டும் காலை 6.20 மணிக்கு சென்னைக்கு செல்லும் ரயில் காலதாமதமாக வந்தது.இதனால் ஆத்திரத்துடன் இருந்த ரயில் பயணிகள், ரேணிகுண்டாவில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரயிலையும், ரேணிகுண்டாவில் இருந்து பாண்டிச்சேரி சென்ற பாசஞ்சர் ரயிலையும் மறித்து, சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவலறிந்ததும் திருத்தணி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, எஸ்ஐ சுரேந்திரன், சிறப்பு எஸ்ஐ மணிவண்ணன் ஆகியோர் ரயில் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
ரயில்கள் ரத்து
இதனிடையே பெங்களூருவில் இருந்து சென்னை வர வேண்டிய பிருந்தாவன் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டது. கனமழை காரணமாக ரயில் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சென்னை - விஜயவாடா- சென்னை ஜனசாப்தி ரயில் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டது.
திருப்பதி ரயில்
திருப்பதி- சென்னை சென்ட்ரல் ரயில் திருவள்ளூர் வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை சென்ட்ரலுக்கு பதில் திருப்பதி ரயில் திருவள்ளூரில் இருந்து இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரயில்கள்
அரக்கோணம் மார்கத்தில் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. வெள்ள நிலவரத்தை பொருத்து அவ்வப்போது பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல்
சென்னை கோயம்பேட்டில் வெளியூர் செல்லும் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தனியார் பேருந்து ஒன்று பழுதாகி நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வடபழனியில் இருந்து கோயம்பேடுவரை சாலைகளில் வெள்ள நீர் குட்டை போல தண்ணீர் தேங்கியுள்ளதால் அனைத்து வாகனங்களும் ஊர்ந்து செல்கின்றன.
26 விமானங்கள் தாமதம்
சென்னையில் கனமழையினால் 26க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிரம்பிய ஏரி
சென்னை செம்பக்கம் நகராட்சிக்கு உட்பட்ட ராஜகீழ்ப்பாக்கம் ஏரி நிரம்பியது. ராஜகீழ்ப்பாக்கம் ஏரி நிரம்பியதால் ஏரியின் 3 இடங்களில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.
பயணிகள் முற்றுகை
இதனிடையே சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில்கள் திருவொற்றியூரில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
சென்ட்ரலில் இருந்து ரயில்கள் இயக்கப்படாத காரணத்தால் ரயில் நிலைய அதிகாரியை பயணிகள் முற்றுகையிட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்ட்ரல் ரயில் நிலைய அதிகாரி, தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் ரயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தண்ணீர் வடிந்த பின்னரே சென்ட்ரலில் இருந்து ரயிலை இயக்க முடியும் என்று நிலைய அதிகாரி கூறியுள்ளதால் காத்திருந்த பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.