வெளுத்து வாங்கும் மழை... சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் - ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
சென்னையில் இன்று காலை முதலே பலத்த மழை பெய்து வருவதால் அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: சென்னையில் அதிகாலை முதலே வெளுத்து கட்டும் மழையால் அண்ணா சாலை, கிண்டி, வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை 30-ஆம் தேதி முதல் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து நேற்று முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்நிலையில் இன்று அதிகாலையிலிருந்தே முகப்பேர், அண்ணா நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது.
இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் விடுமுறை இல்லை என்றும் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை அண்ணா சாலை, நந்தனம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து செல்கின்றன. பள்ளி, கல்லூரி செல்வோர், அலுவலகங்களுக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தாம்பரத்திலிருந்து வேளச்சேரி வரை கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கரணை, மேடவாக்கம் ஆகிய இடங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் வாகனஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.