திருவள்ளூர்: இறால்களுக்கு மண்புழு சேகரிக்க கொத்தடிமைகளான கொடுமை... 30 பேர் மீட்பு
சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே உப்பங்கழியோரம் கொத்தடிமைகளாக இருந்த 30 பேரை வருவாய்த்துறையினர் மீட்டுள்ளனர். நாடு சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் ஆயிரம் 2 ஆயிரம் ரூபாய்க்கு கூட அடிமைகளாக மக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
செங்கல் சூளைகள், முறுக்குக் கம்பெனிகளில் அடிமைத் தொழில் செய்து வந்த மக்கள், இறால்கம்பெனிகளில் மண்புழு சேகரிக்க 30பேர் வரை கொத்தடிமைகளாக அடைபட்டுக்கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டியை அடுத்த மெதிப்பாளையம் அருகே உள்ளது மதுக்கால்குப்பம். இங்கு உப்பங்கழியோரம் சிலர் கொத்தடிமைகளாக இருப்பதாக சென்னை சேத்துப்பட்டுவைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தினர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பொன்னேரி கோட்டாட்சியர் நாராயணன் தலைமையில் கும்மிடிப்பூண்டி தாசில்தார் பால்சாமி மற்றும் வருவாய்த்துறையினர் போலீசாருடன் சென்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சின்னச் சின்ன குடிசைகளில் சிலர் கைக்குழந்தைகள் மற்றும் குடும்பத்தோடு தங்க வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த அஞ்சிக்கேணி, செங்கல்பட்டு அடுத்த புக்கத்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.
இதையடுத்து வேலு(வயது 21), கீதா(18), சின்னராசு(20), முத்தம்மாள்(18), கன்னியம்மாள்(24), 6 மாத கைக்குழந்தை மீனாட்சி, கல்யாணி(30), ராஜேந்திரன்(38), ருக்கு(32), குப்பன்(30), ரவி(45) உள்பட 10 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆண்களும், 8 பெண்களும், 11 குழந்தைகள் என மொத்தம் 30 பேரை மீட்டனர்.
கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர்களுக்கு உடனடி நிவாரணமாக உணவுப்பொருட்கள் மற்றும் தலா ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக சொந்த கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மண்புழு சேகரிப்பு
கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த இவர்களின் வேலையானது, உப்பங்கழியோரம் மண் புழுக்களை சேகரித்து தங்களது உரிமையாளர்களுக்கு தினமும் கொடுக்க வேண்டும். இந்த மண்புழுக்கள், வளர்ப்பு இறால்களுக்கு தீவனமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
கொத்தடிமையாக இருந்த மாரி தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் நீர் நிலைகளில் உள்ள மண்புழுக்களை சேகரித்து கொடுத்து வந்துள்ளார். ஒரு கிலோ சேகரித்தால் நூறு ரூபாய் கிடைக்கும். முதலில் ஒழுங்காக பணம் கொடுத்து வந்த இறால் பண்ணையாளர்கள் பின்னர் பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டனர். ஆனாலும் கடுமையான வேலைகளை வாங்கியுள்ளனர். சிறுசிறு குழந்தைகள் கூட மண்புழு சேகரிக்க வேண்டும். பள்ளிப்படிப்பை அவர்கள் நினைத்து கூட பார்க்க முடியாது என்பதுதான் சோகம்.
ஒருவழியாக கொத்தடிமைகளாக இருந்த 30 பேரும் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். சொந்த ஊரில் சரியான தொழில் இல்லாத காரணத்தினாலேயே வேறு ஊருக்கு சென்று அடிமைகளாக சிக்கிக்கொள்ள நேரிடுகிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
அதிகாரிகளின் அதிரடி சோதனையை அறிந்து கொத்தடிமைகளை நிர்வகித்து வந்த சென்னை கோவளத்தைச்சேர்ந்த ஒருவரும், மீஞ்சூரை அடுத்த ஊரணிமேடு கிராமத்தைச் சேர்ந்த ஒருவரும் தலைமறைவாகி விட்டனர். போலீசார் தலைமறைவானவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.