வாடிய முகத்துடன் ஏமாந்து திரும்பிய சென்னம்மாள்.. ஏன், எதற்காக??
சென்னம்மாளுக்கு அறிவித்த 50 ஆயிரம் தராமல் 5 ஆயிரம் தரப்பட்டுள்ளது.
Recommended Video
செங்கம்: ஆசை காட்டி மோசம் செய்றது இதுதான் போல. யாராக இருந்தாலும் சரி.. சொன்னால் சொன்னபடி நடக்கணும். இல்லையென்றால் சொல்லவே கூடாது.
திருவண்ணாமலை மாவட்டம் நரசிங்கநல்லூர் மலை கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்றது. அப்போது, ஹெலிகேம் பயன்படுத்தி நிலத்தை அளக்க எண்ணி, ரிமோட்டை இயக்கியபோது, ஹெலிகேம் தன் கட்டுப்பாட்டை இழந்துவிட்டிருந்தது. கடைசியில் பார்த்தால் ஹெலிகேம் அங்கு மாயமாகிவிட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கிராம மக்களிடம் சென்று, "ஹெலிகேம் காணாமல் போய்விட்டது, கண்டுபிடித்து தருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்" என்று அறிவித்தனர். இப்படி அறிவித்தது ஒரு தனியார் நிறுவனம்தான்.
கண்டுபிடித்த சென்னம்மாள்
இதனால் இரு தினங்களாக அப்பகுதி மக்களும் பல்வேறு இடங்களில் ஹெலிகேமை தேடி அலைந்தனர். அப்போது தொரபாடி கிராமத்தை சேர்ந்த சென்னம்மாள் என்பவர் அங்குள்ள வன பகுதி ஒன்றில் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்தபோது, ஹெலிகேம் விழுந்து கிடப்பதை பார்த்தார். அதைக் கொண்டு, செங்கம் டிஎஸ்பியிடம் கொண்டு வந்து ஒப்படைத்தார். தனக்கு "50 ஆயிரம் பரிசு" கிடைக்கும் என நினைத்து அங்கேயே நின்று கொண்டிருந்தார். ஆனால், போலீசாரோ, அந்த சென்னம்மாளிடம், "நாங்கள் அந்த பரிசு தொகையை அறிவிக்கவில்லையே.. நில மதிப்பீடுக்குழுதானே அறிவித்தது... அவர்கள்தான் பரிசு வழங்குவது குறித்து முடிவு செய்வார்கள்" என்று சொல்லிவிடவும் சென்னம்மாள் ஏமாற்றமடைந்து வாடிய முகத்துடனே திரும்பி சென்றார்.
ஏமாற்றத்தில் சென்னம்மாள்
இந்நிலையில், செங்கம் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி நேற்று சென்னம்மாள் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சங்கரை அழைத்திருந்தனர். பணம் 50 ஆயிரம் தரப்போகிறார்கள் என்று இருவரும் ஆர்வத்துடன் சென்றால், டிஎஸ்பி 5 ஆயிரம் ரூபாய் பரிசு என வழங்கினார். ரூ.50 ஆயிரம் தருவார்கள் என மகிழ்ச்சியோடு சென்ற இப்போதும் சென்னம்மாள் ஏமாற்றத்துடன்தான் திரும்பி வந்தார்.
வேட்டு வைக்கும் திட்டம்
இதில் 2 விஷயங்களை பார்க்க வேண்டியுள்ளது. முதலில் நம் மக்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை. விளைநிலங்களுக்கு எதிராக அரசு செயல்படுவதை கண்டு ஆவேசமடைந்து பல வகை எதிர்ப்புகளை பதிவு செய்தனர். ஆனால் ஹெலிகாம் தொலைந்து போய்விடவும், அதற்கு சன்மானம் அறிவித்துவிடவும், ஒரு திட்டம் நம் விவசாய மக்களுக்கு "வேட்டு வைக்கும் திட்டம்" என தெரிந்தும் பணத்திற்காக அதனை தேட ஆரம்பித்துவிட்டனர். யார் தேடி கண்டுபிடித்து ஹெலிகாமை மீட்டு கொடுத்தாலும் மீண்டும், அதே ஹெலிகாமை வைத்து மீண்டும் விவசாயிகளுக்கு எதிராகத்தான் குழி தோண்டப்படும் என தெரியாதா?
வார்த்தை தவறலாமா?
மக்களுக்கு எதிராகத்தான் அனைத்தையும் செய்கிறோம் என்று தெரிந்தும், அவர்களின் ஆவேசங்களை நேரில் கண்ணால் பார்த்தும், அவர்களிடமே ஹெலிகேமை தேடி தருமாறு உதவி கேட்ட அதிகாரிகளுக்கு தில்லைப் பாருங்க. அதைவிட, அறிவித்த பணத்தை உடனடியாக கொடுக்காமலும், சன்மான தொகையை சொன்னமாதிரி தராமல் இவ்வளவு குறைத்து தருவதும் சரியா? வார்த்தை தவறி நடப்பது அதிகாரிகளுக்கு அழகா?
8 வழிசாலை ஜொலிக்கபோகுது
மக்களே... 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம், தீக்குளிப்பு முயற்சி, கிணற்றில் விழுவது, மயக்கம்போட்டு விழுவது, பிளேடால் கத்தியை அறுக்க முனைவது.. இதெல்லாம் செய்தும், அரசின் முன் ஒன்றும் வேலைக்காகவில்லை. கிட்டத்தட்ட சாலைபணிகள் அளவீடு முடியவே போகிறது. அதிலும் நமக்கு தோல்விதான். மக்களுக்கு எதிரான ஒரு காரியத்திற்கு உதவ போய் அதற்கும் உரிய சன்மானம் கிடைக்காமல் போய்விட்டது. அதிலும் தோல்விதான். இன்னும் எதிலெல்லாம் சறுக்கி விழப்போகிறோமோ தெரியவில்லை. கடைசியில் ஜொலி ஜொலிக்க போவது 8 வழிச்சாலை மட்டுமே!