கமிஷனர் ஜார்ஜ், செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் சக்கரவர்த்தியா? என கண்டனம் தெரிவித்த ஆறுமுகசாமி!
Recommended Video
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து, சென்னை ஹைகோர்ட் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், தற்போது பணியில் உள்ள மூத்த நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என்கிறது தினகரன் தரப்பு. ஆணையம் அமைத்துவிட்டதால் அதற்கு ஒத்துழைத்துதான் ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது தினகரன் தரப்பு.
முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி குறித்தும், அவரது பணி பாணி குறித்தும் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயம், சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ்ஜை அவர் கடுமையான வார்த்தைகளால் கண்டித்துததான்.
சென்னை போலீஸ் கமிஷனர் என்பவர் ஒரு அரசு அதிகாரி, போலீஸ் அதிகாரி. மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியவர். அவர் ஒன்றும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் சக்கரவர்த்தி அல்ல என்று ஆறுமுகசாமி கூறிய வார்த்தைகள் இன்னும் காவல்துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் சொற்களாக உள்ளன.
பின்புலம்
இந்த சம்பவத்தின் பின்னணி இதுதான்: பாப்புலர் போர்ஜ் நிறுவனம் சார்பில் ஸ்ரீதருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து, சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஸ்ரீதர் புகார் செய்தார். அந்த புகாரில், தான் கொடுத்த ரூ.13 லட்சத்துக்கான வங்கி காசோலைகள், பாப்புலர் போர்ஜ் நிறுவனத்தின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட ராஜாமணியும், பாப்புலர் போர்ஜ் நிறுவனத்தின் இயக்குனர்களும் தன்னை மோசடி செய்கின்றனர் என்று கூறியிருந்தார்.
வழக்கு முடித்து வைப்பு
இந்த புகாரின் அடிப்படையில், 9.5.2005 அன்று போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர், புகார்தாரர் ஸ்ரீதருக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், வழக்கை முடித்து வைத்து, சென்னை சைதாப்பேட்டை 11-வது குற்றவியல் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துவிட்டார்.
மீண்டும் மனு தாக்கல்
இந்த விவரம் தெரிந்தவுடன், தன் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடக்கோரி கோர்ட்டில் ஸ்ரீதர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், முடித்து வைக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி மத்திய குற்றப்பிரிவு கமிஷனருக்கு 26.5.2008 அன்று உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில், மற்றொரு இன்ஸ்பெக்டர் வழக்கை விசாரித்து, இது சிவில் வழக்கு சம்பந்தப்பட்டது என்று கூறி வழக்கை மீண்டும் முடித்து வைத்து 21.3.2011 அன்று அறிக்கையை சைதாப்பேட்டை கோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையை எதிர்த்தும் ஸ்ரீதர் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.
ஹைகோர்ட்டில் மனு
இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், இந்த வழக்கை தகுந்த அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனருக்கு 10.11.2011 அன்று உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் (கந்துவட்டி பிரிவு) உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது போலீஸ் விசாரணைக்கு, ஸ்ரீதர் சார்பில் அவரது வக்கீல் கே.சம்பத்குமார் ஆஜராகி ஆதாரங்களை எல்லாம் கொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் கருணாகரன், இந்த வழக்கை உதவி கமிஷனர் உத்தரவின்படி மீண்டும் முடித்து வைக்கப் போவதாக கூறியுள்ளார். இதையடுத்து உயர்நீதி்மன்றத்தில் ஸ்ரீதர் மனு தாக்கல் செய்தார்.
சக்கரவர்த்தி இல்லை
இந்த மனு மீதான விசாரணையின்போது, கோர்ட் உத்தரவை மதித்து செயல்படும்படி போலீசாருக்கு எடுத்து கூறியும், அவர்கள் தொடர்ந்து இந்த வழக்கு சிவில் சம்பந்தப்பட்டது என்று கூறி 2 முறை வழக்கை முடித்து வைத்து அறிக்கை தாக்கல் செய்துவிட்டனர் என நீதிபதி அதிருப்தி வெளிப்படுத்தினார். இந்த வழக்கின் தன்மை மற்றும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, குற்றச்சாட்டுக்கு ஆதார ஆவணங்களை தாக்கல் செய்தும், கோர்ட் 2 முறை உத்தரவிட்டும் தொடர்ந்து சிவில் சம்பந்தப்பட்டது என்று கூறி போலீசார் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், உதவி கமிஷனர் முருகேசன் ஆகியோர் செயல்பாடுகள் ஒட்டுமொத்த தமிழக அரசுக்கும், சென்னை போலீசுக்கும் கரும்புள்ளியாக அமைந்து விட்டது. போலீஸ் கமிஷனர் (ஜார்ஜ்) என்பவர் போலீஸ் கமிஷனர்தான். அவர் ஒன்றும் புனித ஜார்ஜ் கோட்டையின் சக்கரவர்த்தி இல்லை என்றார் நீதிபதி.
ஜார்ஜ் மக்களை சந்திக்கவில்லை
ஒரு அரசு அதிகாரி என்ற விதத்தில், அவர் பொதுமக்களை சந்தித்து, புகாரை பெற்று, மக்களின் பிரச்சனை தீர்க்கும் விதமாக குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் விதமாக புலன் விசாரணை மேற்கொள்ளவேண்டும். அவர் பாரபட்சம் இல்லாமல் செயல்படவேண்டும். பொதுமக்களின் குறைகளை கேட்க கமிஷனர் மறுப்பது நியாயம் இல்லை. பொதுமக்களின் குறைகளை கேட்டால்தான், ஒரு புகார் குறித்து புலன் விசாரணை மேற்கொண்டு தகுந்த முடிவினை மேற்கொள்ள முடியும். ஆனால், கமிஷனராக பதவி ஏற்ற நாள் முதல், கமிஷனர் ஜார்ஜ் பொதுமக்களை நேரில் சந்திக்காமல் இப்படி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளார். எனவே, இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து எடுத்துக்கூற போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், வெள்ளிக்கிழமை இந்த கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
கோர்ட் உத்தரவை மதிக்க வேண்டியது போலீஸ் அதிகாரியின் கடமையில் ஒன்றுதான். எனவே இதில் விலக்கு அளிக்க முடியாது என்று உத்தரவிட்டார்.