அம்பேத்கருக்கு காவி சட்டை, திருநீறு பட்டையுடன் போஸ்டர்- அர்ஜூன் சம்பத் கட்சி நிர்வாகிகள் 2 பேர் கைது
கும்பகோணம்: அண்ணல் அம்பேத்கரை காவி சட்டை, திருநீறு பட்டை, குங்கும பொட்டு உருவத்துடன் சித்தரித்து அர்ஜூன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சியினர் ஒட்டியிருந்த சர்ச்சை போஸ்டர்கள் கும்பகோணத்தில் அகற்றப்பட்டன. மேலும் அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் இன்று டிசம்பர் 6. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து இந்து மதத்தில் கடைபிடிக்கப்பட்ட அத்தனை தீண்டாமை கொடுமைகளையும் அனுபவித்தவர் அண்ணல் அம்பேத்கர். கல்வி மறுக்கப்பட்ட சமூகமாக அடக்கப்பட்டிருந்த நிலையிலும் தடைகளைத் தகர்த்து உயர் கல்வி கற்று இந்த தேசத்தின் அரசியல் சாசனத்தை உருவாக்கிய மாமேதை அண்ணல் அம்பேத்கர்.
புஷ்பவனம் குப்புசாமியா இது? அர்ஜுன் சம்பத் வீடியோ - சனாதன இந்து தர்ம நிகழ்ச்சிக்கு மனைவியோடு அழைப்பு
இந்து மதத்தை விட்டு வெளியேறிய அம்பேத்கர்
இந்தியத் திருநாட்டின் அரசியல் சாசனத்தையே உருவாக்கியவராக அண்ணல் அம்பேத்கர் திகழ்ந்தாலும், இந்து மத கட்டமைப்பில் இருந்து ஜாதிய ஒடுக்குமுறைகளில் இருந்து அவரால் மீள முடியவில்லை. இதனால் இந்து மதத்தைவிட்டே வெளியேறுவது என முடிவெடுத்தார் அம்பேத்கர். 1956-ம் ஆண்டு அக்டோபர் 14-ந் தேதி பல லட்சக்கணக்கான ஒடுக்கப்பட்ட சமூக மக்களுடன் இந்து மதத்தை விட்டு வெளியேறி பவுத்த மதத்தில் அம்பேத்கர் இணைந்து கொண்டார். இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக, ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஒரு கலக வடிவமாக பார்க்கப்பட்டது.
இந்துவாக சாகமாட்டேன் ஏன்?- அம்பேத்கர்
அம்பேத்கர், தாம் ஒரு போதும் ஜாதிய ஒடுக்குமுறைகள் நீடிப்பதால் இந்துவாக சாக விரும்பவில்லை என பிரகடனம் செய்தார். இது தொடர்பாக அம்பேத்கர் கூறுகையில், கெடுவாய்ப்பாக, நான் ஒரு தீண்டத்தகாத இந்துவாகப் பிறந்து விட்டேன். அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால், அருவருக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக் கொள்ள முடியும். எனவே நான் உறுதியாகக் கூறுகிறேன்: நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன். ஒரு வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கல்வி பெற முடியும், இரண்டாம் வகுப்பினர் ஆயுதம் ஏந்தவும், மூன்றாவது வகுப்பினர் வாணிபம் செய்யவும், நான்காவது வகுப்பினர் அடிமைகளாக இருக்கவும் வேண்டும் என்று சொல்லும் எந்த மதத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒரு மதத்தின் அடிப்படையான கோட்பாடு என்பது, ஒரு தனி மனிதனின் ஆன்ம வளர்ச்சிக்கு ஏதுவான சூழலை உருவாக்கித் தருவதே. இதை நீங்கள் ஒப்புக்கொண்டால் இந்து மதத்தில் இருந்து கொண்டு உங்களை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள முடியாது என்பது தெளிவு. ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு அவசியமானவை மூன்று. அவை பரிவு, சமத்துவம் மற்றும் சுதந்திரம். இவற்றில் ஏதாவது ஒன்று இந்து மதத்திலிருந்து உங்களுக்குக் கிட்டும் என்று உங்கள் அனுபவத்தை வைத்துச் சொல்ல முடியுமா? என பிரகடனம் செய்திருந்தார்.
பாஜக, இந்துத்துவாவின் நாடக அரசியல்- திருமாவளவன்
ஜாதிய ஒடுக்குமுறைகளை இந்துத்துவ- வர்ணாசிரம கோட்பாடுகளை மிக கடுமையாக எதிர்த்தவர் அண்ணல் அம்பேத்கர். ஆனால் காலச்சக்கரம் சுழல, இப்போது இந்துத்துவ கோட்பாட்டாளர்கள், அம்பேத்கரை கொண்டாடுகின்றனர். இந்த அரசியல் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டிருந்த அறிக்கையில், பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார்கள் ஒருபுறம் புரட்சியாளர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தும் நாடக அரசியலைச் செய்து வருகின்றனர். அதே வேளையில், இன்னொருபுறம் அவரது சமத்துவக் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை அழித்தொழிப்பதிலே குறியாக உள்ளனர். அதனை உணரத் தவறினால் நாம் வரலாற்றுப் பெருந்தவறினை செய்தவர்களாவோம் என தெரிவித்திருந்தார். எனவே, இதனை முன்னுணர்ந்து அவர்களை வெகுமக்களிடையே அம்பலப்படுத்துவதில் உறுதியாகச் செயல்படுவோம். அதற்கான ஒரு நாளாக இந்நாளைக் கடைபிடிப்போம்! சமூக நல்லிணக்க உறுதிமொழி ஏற்போம் என தொல். திருமாவளவன் கூறியிருந்தார்.
காவி உடை தரித்த அம்பேத்கராக சித்தரிப்பு
தற்போது, அம்பேத்கரை காவி(ய) தலைவன் என பட்டம் வழங்கி அர்ஜூன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சியினர் கும்பகோணத்தில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். அத்துடன் காவி சட்டை, நெற்றியில் திருநீறு பட்டை, குங்குமம், பட்டுத் துண்டுடன் அம்பேத்கர் படத்தை பொய்யாக சித்தரித்தும் அதில் இடம்பெறச் செய்துள்ளனர். இந்து மக்கள் கட்சியின் இந்த சர்ச்சை போஸ்டர்கள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்து மக்கள் கட்சியினரின் இந்த போஸ்டர்களை அகற்ற வேண்டும் என போலீசில் பல்வேறு அமைப்பினர் புகார் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து கும்பகோணம் நகரத்தின் பல பகுதிகளில் அம்பேத்கரை காவிமயமாக்கி இந்து மக்கள் கட்சியினர் ஒட்டியிருந்த சுவரொட்டிகள் அனைத்தும் அடுத்தடுத்து அகற்றப்பட்டன. இந்து மக்கள் கட்சியின் இந்த அம்பேத்கரை இழிவுபடுத்தும் சுவரொட்டிகளுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த போஸ்டரை ஒட்டிய இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.