செங்கலே வேண்டாம்… வீடுகட்ட தண்ணீர் பாட்டில் போதும் – சமர்ப்பண் அறக்கட்டளை சாதனை
சென்னை: அம்பத்தூரில் செங்கற்களுக்கு பதிலாக மணல் அடைத்த பிளாஸ் டிக் பாட்டில்களை பயன்படுத்தி வீட்டை கட்டி சமர்ப்பண் அறக்கட்டளை சாதனை படைத்துள்ளது.
குப்பையில் வீசப்படும் காலி குடிநீர் பாட்டில்களை உறுதியான கட்டுமானத்துக்கு பயன்படுத்துவதில் சமர்ப்பண் என்ற அறக்கட்டளை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த அறக்கட்டளையை நிறுவியவர் கோவாவை சேர்ந்த பாட்ரிக் சான்பிரான்சிஸ்கோ. இவரது மனைவி ரொமெய்ன்.
குடிநீர் பாட்டில்களால் வீடு:
இவர்கள் அம்பத்தூர் பகுதியில் உள்ள சரத்து கண்டிகை என்ற கிராமத்தில் 2 ஏக்கர் நிலத்தில் தங்களுக்கான வீட்டை தாங்களே கட்டி வசிக்கின்றனர். அந்த வீட்டை இவர்கள் குடிநீர் பாட்டில்களை கொண்டு தான் கட்டியுள்ளனர்.
ஏழைகளுக்குப் பயன்பட:
இதுகுறித்து ரொமெய்ன், "மனிதர்களால் கழிக்கப்படும் பொருட்கள் சுற்றுச்சூழலை பாதிக்காமல், மீண்டும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். அதோடு ஏழைகளும் பயன்பெற வேண்டும்.
காலிபிளாஸ்டிக்கில் மணல்:
பல்வேறு வகைகளில் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை பெறுகிறோம். கட்டிட அஸ்திவாரத்துக்காக தோண்டப்படும் மணல் போன்ற தேவைப்படாத மணலை அந்த பாட்டில்களில் நிரப்பி அதை இறுக்கமாக மூடுகிறோம்.
வரிசையாக அடுக்கிக் கட்டு:
பின்னர் செங்கற்களுக்கு பதிலாக அவற்றை வரிசையாக அடுக்கி, சிமெண்ட் மூலம் இடைவெளியை நிரப்பி கட்டிடத்தை கட்டுகிறோம். கூரை வேய்வதற்கு "பீம்" போட்டு, அவற்றோடு இந்த மணல் பாட்டில்களை வைத்து கட்டுகிறோம்.
சிமெண்ட் தேவை குறைவு:
மற்ற கட்டிடங்கள் போல் வெளிப்பூச்சு அமைந்தாலும், உள்ளே மண் பாட்டில்கள் தான் இருக்கும். இந்த கட்டுமானத்தில் அதிக செலவை ஏற்படுத்தும் சிமெண்ட், செங்கல், இரும்பு போன்றவற்றின் தேவை மிக, மிக குறைவு.
உறுதியாகும் கட்டிடம்:
மண் பாட்டில்களால் அமைக்கப்படும் கட்டுமானத்தின் மேலே நைலான் மீன் வலையை விரித்து பூசிவிடுகிறோம். இதனால் கட்டிடம் மேலும் உறுதியாகிறது. சுனாமி, புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களின்போது இதுபோன்ற கட்டிடங்கள் தாக்குப்பிடிக்குமா? என்ற சந்தேகம் எழும். அவற்றை அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களை வைத்து உறுதி செய்துள்ளோம்.
நல்ல உறுதி:
மிக அதிக பூமி அதிர்விலும் இந்தக் கட்டிடம் அசையாமல் நிற்பதை சோதித்துப் பார்த்து, உறுதிக்கான அங்கீகாரத்தை அந்த நிறுவனத்தார் வழங்கியுள்ளனர். இதற்கான சோதனையில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்தும் பார்க்கப்பட்டது. ஒரு கட்டிடத்தை இடிக்க 4 மணி நேரம் ஆனது. மற்ற கட்டிடங்களை இடிக்க 20 நிமிடங்கள் தான் ஆகும்.
குறைந்த செலவில் கட்டிடம்:
இந்த கட்டிடங்களை கட்டுவதற்கு பொறியாளர், கட்டிடக்கலை நிபுணர்கள் தேவையில்லை. குறைந்த பணியாளர்களை வைத்தே கட்டிவிடலாம். 240 சதுரஅடி கட்டிடம் கட்டுவதற்கு ரூபாய் 50 ஆயிரம் தான் செலவாகிறது.
அரசும் பயன்படுத்தலாம்:
அரசின் வீடு கட்டும் திட்டங்களுக்கு இந்த முறையை பயன்படுத்தினால், திட்டச் செலவு குறையும். மேற்கத்திய நாடுகள் இந்த முறையை தேர்வு செய்துள்ளன. நாங்களும் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி உள்ளிட்ட சில இடங்களில் இதுபோன்ற கட்டிடங்களை கட்டிக் கொடுத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.