போலீஸ் யூனிபார்மில் தப்பியதாக சைக்கோ ஜெய்சங்கர் வாக்குமூலம்: காவல்துறை மறுப்பு
சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்ற சைக்கோ ஜெய்சங்கர், கர்நாடகா, தமிழகம் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தனியாக இருக்கும் இளம் பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த குற்றவாளி. ஜெய்சங்கர் மீது சுமார் 31 வழக்குகள் பதிவாகியுள்ளன. சமீபத்தில், பிஜாப்பூரில் நடந்த பலாத்கார, கொலை வழக்கு தொடர்பாக கர்நாடக காவல்துறையினர் ஜெய்சங்கரை கைது செய்து பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி, சிறையிலிருந்து தப்பிய ஜெய்சங்கரை, 6 நாள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு பரப்பனஅக்ரஹாரா சிறையின் அருகேயுள்ள கூட்லு கேட் பகுதியில் மீண்டும் போலீசார் கைது செய்தனர்.
கடந்த சனி மற்றும் திங்கட்கிழமையில் ஜெய்சங்கரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜெய்சங்கர் பல பரபரப்புத் தகவல்களை வெளியிட்டதாகத் தெரிய வந்துள்ளது.
வாக்குமூலத்தில் ஜெய்சங்கர் தெரிவித்திருப்பதாவது, ‘சிறையில் இருந்து தப்பிக்க தொடர்ந்து திட்டுமிட்டு வந்தேன். இதற்காக சிறை அதிகாரிகளின் உதவியை நாடினேன். அவர்கள் காக்கி யூனிபார்மை கொடுத்து தப்பி செல்ல வழி செய்தனர். அது மட்டுமின்றி சிறையின் சுற்றுபுறத்திலுள்ள 30 அடி சுவரை தாண்டுவதற்கு 2 போர்வைகளை கொடுப்பதாக கூறினர். இறுதியில் ஒரே ஒரு போர்வைதான் கொடுத்தனர்.
நள்ளிரவு அதை வைத்து தப்பி செல்வதற்கு முயன்றபோது ஏற்கனவே நான் இருந்த மருத்துவமனையின் கதவு திறக்கப்பட்டு இருந்தது. அதிகாலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் நான் காக்கி சட்டையை மாட்டிக் கொண்டு, மெதுவாக நடந்து சென்று மருத்துவமனையின் மேற்கூரையை ஏறி குதித்தேன். சரியாக 10 மணியளவில் மருத்துவமனையின் அருகேயுள்ள சுவரை ஏறுவதற்கு முயற்சித்தேன். இதற்கென அங்கு கட்டிட வேலைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு இரும்பு ஏணியை கொண்டு சுவரில் ஏறி குதித்தேன்.
பின்னர் அதிலிருந்து மெயின் சுவருக்கு செல்வதற்காக முயன்றபோது, மற்றொரு சுவர் இருந்தது. அதில் மெதுவாக ஏறி நடந்து சென்றேன். அப்போது எனது கணுக்காலில் சிறிது காயம் ஏற்பட்டது. அதை பொருட்படுத்தாமல் கையில் இருந்த போர்வையை 30 அடி உயரத்தில் இருந்த இரும்பு கம்பியின் மீது வீசினேன். பின்னர் அதை பிடித்து சுவர் ஏறினேன். ஆரம்பத்தில் முடியாமல் போனது. இருப்பினும் முயற்சி செய்து சுவரை ஏறி குதித்து சாவகாசமாக தப்பி சென்றேன். மெயின் ரோட்டை அடைந்து அங்கு வந்த ஆட்டோ ஒன்றை வழிமறித்து ஏறி சென்றேன்.
எலக்ட்ரானிக் சிட்டி அருகே ஆட்டோ டிரைவர் என்னை இறக்கி விட்டான். சாலையோரம் 2 நாள் தங்கினேன். பின்னர் அங்கிருந்து சிறிது தூரம் கடந்து சென்று கூடலூகேட்டை அடைந்தபோது, மீன் பிடிப்பவர்கள் அமைத்திருந்த குடிசைக்கு சென்று தங்கினேன். செப்டம்பர் 6 ஆம் தேதி காவல்துறையினர் வந்து என்னை கைது செய்தனர்' எனத் தெரிவித்துள்ளான்.
ஆனால், சைக்கோ ஜெய்சங்கரின் வாக்குமூலம் குறித்து சிறைத்துறை டிஐஜி வி.எஸ் ராஜூ கூறுகையில், "சைக்கோ ஜெய்சங்கர் தப்பி செல்ல சிறைத்துறை அதிகாரிகள் உதவியாக சொல்வதில் உண்மையில்லை. வழக்கமாக, சிறையில் கைதிகளுக்கு 2 போர்வைகள் கொடுக்கப்படும். அது தப்பி செல்வதற்காக கொடுக்கப்பட்டவை அல்ல. மருத்துவமனையில் அவர் தப்பி செல்லும்போது பாதுகாவலர்கள் கவனக்குறைவாக இருந்ததில் வேண்டுமானால் உண்மை இருக்கலாம். இது குறித்து விசாரித்து வருகிறோம்" என்றார்.