நான்தான் ஆட்சியை கலைக்கக்கோரி ஆளுநரிடம் மனு அளித்தேன்.. எம்எல்ஏக்களுக்காக வரிந்துகட்டும் தினகரன்!
பெரும்பான்மையில்லாத ஆட்சியை கலைக்கக்கோரி ஆளுநரிடம் நான்தான் மனு அளித்தேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: பெரும்பான்மையில்லாத ஆட்சியை கலைக்கக்கோரி ஆளுநரிடம் நான்தான் மனு அளித்தேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தனது ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வரை மாற்ற வேண்டும் என்றுதான் மனு அளித்தனர் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினரான டிடிவி தினகரன் நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்று வருகிறார். கடந்த 3 நாட்களாக கூட்டத்தில் பங்கேற்கும் தினகரன் பேச அனுமதி மறுக்கப்படுவதாக இடையிலேயே வெளிநடப்பு செய்து வருகிறார்.
இன்றும் சட்டசபையில் இருந்து டிடிவி தினகரன் வெளிநடப்பு செய்துள்ளார். ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் வெளிநடப்பு செய்தார்.
தினகரனிடம் கேள்வி
அப்போது சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அவரிடம் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஆட்சியை கலைக்க கோரினேன்
அதற்கு பதிலளித்த தினகரன் 18 எம்எல்ஏக்களும் முதல்வரை மாற்றவேண்டும் என்றுதான் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர் என்றார். மேலும் தான்தான் பெரும்பான்மை இல்லாத ஆட்சியை கலைக்கக்கோரி ஆளுநரிடம் மனு அளித்தேன் என்றும் தினகரன் ஒப்புதல் தெரிவித்தார்.
அரசு காலண்டரில்
மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறினார். அரசு காலண்டரில் மோடியின் படம் இடம் பெற்றுள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.
போட்டியிட தயார்
பெயருக்குதான் ஜெயலலிதா அரசு என்கிறார்கள் என்ற தினகரன், மத்திய அரசுடன் சுமூகமாக இருப்பது வேறு என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் போட்டியிட தயார் என்றும் தினகரன் தெரிவித்தார்.
மழுப்பிய தினகரன்
கட்சி தொடங்குவீர்களா அல்லது சுயேச்சையாய் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தினகரன் பொறுத்திருங்கள் என மழுப்பினார்.