இரட்டை இலைச் சின்னத்தில் தான் போட்டியிடுவேன்... டிடிவி.தினகரன் திட்டவட்டம்
ஆர்கே.நகர் தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என அதிமுக வேட்பாளர் டிடிவி.தினகரன்ன தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்கே.நகர் தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என அதிமுக வேட்பாளர் டிடிவி.தினகரன்ன தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலுக்குப் பின் ஓபிஎஸ் அணிக்கு முடங்கிப் போய்விடும் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக ஓட்டுகளை மட்டுமே மையமாக வைத்து ஓபிஎஸ் தரப்பு அதிமுக, சசிகலா தரப்பு அதிமுக மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
ஆர்கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சசிகலா தரப்பு அதிமுக சார்பில் அவரது அக்காள் மகனான டிடிவி.தினகரன் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இரட்டை இலையில்தான் போட்டியிடுவேன்
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு டிடிவி.தினகரன் பதிலளித்தார். அப்போது எந்த சின்னத்தில் போட்டியிடுவீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தினகரன், இரட்டை இலைச் சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஓபிஎஸ் அணி முடங்கிப் போய்விடும்
இரட்டை இலைச்சின்னத்தை பெறுவது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது அணியினர் டெல்லி சென்றுள்ளது குறித்து தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ஆர்கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பின் ஓபிஎஸ் அணி முடங்கிப் போய்விடும் என்றார்.

ஓபிஎஸ் ஒரு நடிகர் திலகம்
மேலும் ஓபிஎஸ் ஒரு நடிகர் திலகம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஓ.பன்னீர்செல்வம் தமிழக மக்களை ஏமாற்றி வருவதாகவும் தினகரன் குற்றம்சாட்டினார்.

திமுகதான் எங்களின் எதிரி
பதவி ஆசைக்காக சிலர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். திமுகவை மட்டுமே தாங்கள் எதிரிக்கட்சியாக நினைப்பதாகவும் டிடிவி.தினகரன் கூறினார்.












Click it and Unblock the Notifications