தலைவர் இல்லாமல் நடக்குது நாடு... இது இளையராஜா கருத்து
தமிழக அரசியல் நிலவரம் குறித்து இசைஞானி இளையராஜா நகைச்சுவையாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக அரசு தற்போது தலைமை இல்லாமல் செயல்படுவதாக இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.
அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் காலமானார். அவருக்கு அடுத்தபடியாக கட்சியையும் ஆட்சியையும் சிறப்பாக வழி நடத்திச் செல்ல ஆளில்லாமல் தமிழக அரசும், அதிமுகவும் தத்தளித்து வருகிறது.

அதிகாரப்போட்டி, பதவியாசை என்னும் பலஅலைகளை எதிர்நோக்கி வருவதால் கடந்த 4 மாதங்களாக தமிழக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன அதிரடி திருப்பங்கள். இரண்டரை மாதத்திற்கு ஒரு முதலமைச்சர் என்ற கதையாக ஓ.பன்னீர்செல்வம் பிப்ரவரி மாதம் வரை முதலமைச்சராக இருந்தார், இதனையடுத்து எடப்பாடி இரண்டரை மாதமாக முதலமைச்சர் பதவியில் உள்ளார்.
அதிமுகவின் சசிஅணியாக இருந்தது தற்போது இ.பிஎஸ் அணியாக மாறியுள்ளது, ஓ.பன்னீர்செல்வம் அணி தாங்கள் தான் உண்மையான அதிமுக என்று கூறி வருகிறது. முதலமைச்சர் பதவி யாருக்கு, அதிமுக பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என்று இரு அணிகளும் அடித்துக் கொள்கின்றனர்.
இந்த நிலையில் இசைஞானி இளையராஜா தமிழக அரசியல் நிலவரம் குறித்து தன்னுடைய கருத்தை முன்வைத்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் ஏப்ரல் 28ம் தேதி கவிக்கோ அப்துல் ரகுமான் விருது விழா மற்றும் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்று நூல்களை வெளியிட்டார் இளையராஜா, அதன் பின்னர் விழாவில் உரையாற்றிய அவர். "ஒரு விழாவிற்கு வந்தால் இவர் தலைமை தாங்குவார் என்று அறிவிக்க வேண்டும், அப்படி எதுவும் அறிவிக்கவில்லை...அப்புறம் எப்படி நான் தலைவர், தலைவர் இல்லாமல் நடக்குது நாடு அப்படி போய்ட்டு இருக்கு" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications