சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கு: 100 கேள்விகளுடன் தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ விசாரணை!!
சென்னை: சட்டவிரோதமாக பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பகம் ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம் டெல்லியில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று துருவித் துருவி விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையின் போது தயாநிதி மாறனிடம் 100 கேள்விகளுக்கான பதில்களைப் பெற்றுவிடுவதில் சி.பி.ஐ. அதிகாரிகள் முனைப்பாக இருந்தனர்.
2004ஆம் ஆண்டு ஜூன் முதல் 2007ஆம் ஆண்டு ஜூன் வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அப்போது சில பி.எஸ்.என்.எல். அதிகாரிகளுடன் சேர்ந்து அவர் அதிக திறன் வாய்ந்த தொலைபேசி இணைப்புகளை தனது சென்னை, போட் கிளப் இல்லத்தில் இருந்து தனது சகோதரர் கலாநிதி மாறன் நடத்தி வரும் சன் டிவி அலுவலகத்துக்கு இடையே பூமிக்கு அடியில் கேபிள்கள் அமைத்து இணைத்திருந்தார்.
இதன் மூலம் 300-க்கும் அதிகமான தொலைபேசி இணைப்புகளை அவர் விதிகளை மீறிப் பெற்றிருந்தார் என்பது வழக்கு. இந்த வழக்கில் தயாநிதி மாறன், பி.எஸ்.என்.எல். பொது மேலாளராக இருந்த கே.பிரம்மநாதன், துணைப் பொது மேலாளராக இருந்த எம்.பி.வேலுச்சாமி ஆகியோர் மீது சி.பி.ஐ. போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக இருந்த வி.கவுதமன், சன் டி.வி.யின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரீஷியன் எல்.எஸ்.ரவி ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் இந்த மூவரும் ஜாமீனில் வெளிவந்தனர்.
இதனிடையே இந்த வழக்கில் தயாநிதி மாறனை ஜூலை 1-ந் தேதியன்று ஆஜராகுமாறு சி.பி.ஐ. உத்தரவிட்டிருந்தது. இந்த விசாரணையின் போது தாம் கைது செய்யப்படக் கூடும் என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் முன் ஜாமீன் கோரியிருந்தார்.
இதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அவருக்கு 6 மாத கால இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது. இதன் பின்னர் சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகி பிணைத் தொகை செலுத்தி முன்ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் இன்று விசாரணைக்காக தயாநிதி மாறன் ஆஜரானார். அவரிடம் சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள் தொடர்பாக துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் 100க்கும் மேற்பட்ட கேள்விகளைத் தயாரித்திருந்தனர். இன்றைய ஒரே நாளில் இத்தனை கேள்விகளுக்கும் பதில்கள் கிடைக்காவிட்டால் அடுத்தடுத்த நாட்கள் தொடர்ந்து தயாநிதியிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
மேலும் தயாநிதி மாறனின் உதவியாளர்கள் விசாரணையின் போது தெரிவித்த தகவல்களை முன்வைத்தும் தயாநிதி மாறனிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. குறிப்பாக சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் எப்படி தயாநிதி மாறன் வீட்டில் அமைக்கப்பட்டது என்பதை இந்த விசாரணையில் அறிய இருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் கூறுகின்றனர்.