ரூ.100 கோடி வரி ஏய்ப்பு.. பான் மசாலா, குட்கா தயாரிப்பாளர் வீடுகளில் அதிரடி "ஐடி" ரெய்டு!
சென்னை: பான்மசாலா, குட்கா தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களின் வீடுகள், குடோன்களில் என 30 இடங்களில் வருமான வரித்துறையினர் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர். இதில், ரூ.100 கோடி வரி ஏய்ப்பு செய்தற்கான ஆவணங்களும், கணக்கில் வராத ரூ.76 லட்சம் ரொக்கமும் சிக்கியது.
தமிழகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மூன்று மாநிலங்களில் 30 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 40 குழுக்களாக சோதனை மேற்கொண்டனர். அதேபோல் கர்நாடகத்தில் பெல்ஹாமிலும், புதுச்சேரியில் ஒரு இடத்திலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.
ரூ.100 கோடி வரி ஏய்ப்பு?
சென்னைக்கு அருகே செங்குன்றம் பகுதியில் உள்ள 7 கிட்டங்கிகளிலும், கோடம்பாக்கத்தில் 2 வீடுகளிலும், மைந்தக்கரையில் உள்ள ஒரு அலுவலகத்திலும் என மொத்தம் 18 இடங்களில் சோதனை நடைபெற்றன. இதில், அரிசி ஆலைகள், கிட்டங்கிகள் செயல்படுவது போல் காட்டிக் கொண்டு, தயாரிப்பும், பாக்கெட்டுகள் அடைப்பதும் நடைபெற்றுவந்துள்ளது தெரியவந்தது.
இந்தச் சோதனையில் சுமார் ரூ.100 கோடி வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதற்கான ஆவணங்கள் சிக்கின. இதுதவிர, கணக்கில் வராத ரூ.76 லட்சம் பணம் இருப்பதும் தெரியவந்தது. இவை பறிமுதல் செய்யப்பட்டன.
சோதனை நீடித்ததால் மொத்த வரி ஏய்ப்புத் தொகையும், பறிமுதல் செய்யப்பட்ட கணக்கில் வராத பணமும் சனிக்கிழமையே தெரியவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தெலுங்கானா, ஆந்திரா குடோன்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனை இன்றும் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.