தென் மாவட்டங்களில் கனமழை… நிரம்பி வரும் அணைகள்… நீங்கிய வறட்சி
திருநெல்வேலி: திருநெல்வேலி, கன்னியாகுமரி. தூத்துக்குடிமாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் நேற்று ஒரே நாளில் 30 செ.மீ. மழை பெய்துள்ளது. அதே மாவட்டத்தில் உள்ள மணிமுத் தாற்றில் 27 செ.மீ., அம்பையில் 23 செ.மீ., நாங்குநேரியில் 17 செ.மீ., சேரன்மாதேவியில் 15 செ.மீ. மழை பெய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 11 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி, குழித்துறையில் 10 செ.மீ.மழை அளவு பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், பேச்சிப்பாறை, தக்கலை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது.
இது தவிர புதுக்கோட்டை, திருப்பூர், கரூர், தூத்துக்குடி, நாமக்கல், நீலகிரி, தேனி, தஞ்சாவூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், ஈரோடு, திருச்சி, திருவாரூர், மதுரை, திண்டுக்கல், தருமபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.
நீர்மட்டம் உயர்வு
கடந்த 4ந்தேதி முதல் நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்துவருகிறது. இம்மழையின் காரணமாக இம் மாவட்டத்தின் பெரிய அணையாக இருக்கும் பாபநாசம் அணை, சேர்வலாறு அணை,மணிமுத்தாறு அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
ரிகளும், குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.
தாமிரபரணியில் வெள்ளம்
குழித்துறை தாமிரபரணி ஆறு சில மாதங்களுக்கு பிறகு கரை புரண்டு ஓடுகிறது. காணும் இடமெங்கும் தண்ணீராக காட்சி தருவதால் கத்திரி வெயிலின் தாக்கமே தெரியவில்லை. எங்கும் குளிர்ந்த காற்று வீசுகிறது.
குற்றாலத்தில் தொடர் வெள்ளம்
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பலத்த மழை பெய்துவருகிறது . இதனால் செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.அருவிநீரில் தொடர்ந்து மரங்களும், கற்களும் வெள்ளத்தில் அடித்துவரப்பட்டவண்ணம் உள்ளது.
அருவிக்கரைகள் சேதம்
மெயின் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியிலுள்ள பாதுகாப்பு கம்பிகளும் சேதமடைந்தன.தொடர்ந்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு
குற்றாலம் மெயின் அருவி தண்ணீரால் உருவாகும் சிற்றாறு நதியின் வெள்ளம்பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அந்த பகுதிகளுக்குசெல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஐந்தருவியில் அனுமதி
ஐந்தருவி,பழைய குற்றால அருவிகளில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.
அடித்துச்செல்லப்பட்ட பாலம்
வெள்ளபெருக்கு காரணமாக சுரண்டை,பகவதிபுரம்,ஆகியப் பகுதிகளில் புதியப் பாலம் அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது அதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டுள்ளன.
வழிந்தோடும் வெள்ளநீர்
பழைய குற்றாலத்தில் வெள்ளத்தினால் படிகள் வழியாகவும் தண்ணீர் வழிந்தது. இன்று பகலில் மழை பெய்தது. இந்த மழையினால் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும் உயர்ந்து குடிநீர் பஞ்சம் தீர்ந்துள்ளது.
வறட்சியில் இருந்து தப்பியது
நெல்லை மாவட்டத்திலுள்ள அனைத்து அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் தண்ணீர் வறண்டுகிடக்கும் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.இதன் மூலம் குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.வறட்சியான பலபகுதிகள் வரும் நாட்களில் வளம் பெறும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
குமரியில் குதூகலம்
குமரி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக பெய்து வரும் கனமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு -I, சிற்றாறு-II ஆகிய அணைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அதிகம் விழுவதால், சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அதிகமாக உள்ளது.