தபால் நிலையங்களில் புனித கங்கை நீர் விற்பனை
சென்னை: தபால் நிலையங்களில் போஸ்ட் கவர், கார்டு, ஸ்டாம்ப் விற்பனை செய்த காலம் போய் இப்போது புனித கங்கை தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தியாவில் உள்ள தலைமை தபால் அலுவலகங்களில், ரிஷிகேஷ் மற்றும் கங்கோத்ரி ஆகிய இடங்களில் இருந்து கங்கை நதியின் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
தபால் துறையின் இ - காமர்ஸ் பிரிவு, பல்வேறு பொருட்களை மக்களுக்கு பார்சல் மூலம் கொண்டு சேர்க்கிறது. அந்தவகையில், இந்து மக்கள் புனிதமாக போற்றும், கங்கை நிதியின் புனித நீரை, பார்சல் மூலம் விற்பனை செய்யும் புதிய திட்டத்தை இந்திய தபால்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷிலிருந்து, கங்கை நீரை, 200 மி.லி., மட்டும், 500 மி.லி., கொள்ளளவு பாட்டிலில் நிரப்பி தபால் நிலையங்களில் நேற்று முதல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கங்கா தீர்த்தம்
பீகார் தலைநகர் பாட்னாவில், பாட்டில்களில் அடைக்கப்பட்ட புனித கங்கா தீர்த்தத்தின் முதல் விற்பனையை, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார்.200 மில்லி லிட்டர், 500 மில்லி லிட்டர் பாட்டில்களில் கங்கை தீர்த்தத்தை அடைத்து, நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் விற்பதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னை தபால் நிலையங்கள்
சென்னை, தலைமை தபால் நிலையத்தில் இன்று முதல் விற்பனைத் தொடங்கி உள்ளது. சென்னைக் கோட்ட தபால் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர், " நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களுக்கு கங்கை நீர் பாட்டில்களை அனுப்பும் பணியில் உத்தரகாண்ட் மாநில தபால் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விலை எவ்வளவு?
ரிஷிகேஷில் இருந்து வரும் கங்கை நீர் 200 மில்லி 15 ரூபாய்க்கும், 500 மில்லி பாட்டில் 22 ரூபாய்க்கும் விற்கப்படும். அதுவே, கங்கோத்திரியில் இருந்து வரும் கங்கை தீர்த்தத்தின் விலை 25 மற்றும் 35 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் ஒரு வாரத்திற்குள் கங்கை தீர்த்தம் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பேசினார்.
கோவையில் விற்பனை
கோவை கோட்ட தபால்துறை அதிகாரி கூறுகையில், ''கோவையில், தலைமை தபால்நிலையத்தில் மட்டுமே புனித நீர் விற்பனை துவங்கியுள்ளது. 200 மி.லி., பாட்டில், 15 ரூபாய்க்கும், 500 மி.லி., பாட்டில், 22 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.
நேரடியாக வரலாம்
முதல்கட்டமாக கோவைக்கு, 31 பாட்டில்கள் வரவழைக்கப்பட்டன. இனி மக்களின் தேவைக்கேற்ப, 'பல்க்' ஆர்டர்களுக்கும் ஏற்றுக்கொள்ளப்படும். வாங்க விரும்புவோர், காலை, 10.00 முதல் மாலை, 4.00 மணிக்குள் தலைமை தபால் நிலையத்துக்கு நேரடியாக வரலாம், என்று கூறினார்.
புனித நீர்
காசிக்கு போக வேண்டும், கங்கையில் நீராட வேண்டும் என்பது பெரும் பாலான இந்துக்களின் வாழ்நாள் கனவாக இருக்கிறது.ஆனால் அவ்வளவு தூரத்துக்கு சென்று வருவதற்கான பெரும்பாலான மக்களுக்கு வாய்ப்பு வசதிகள் கிடைப்பதில்லை. அதேபோல் ஹோமங்கள், பூஜைகளில் கங்கை புனித நீரை பயன்படுத்த வேண்டும் என்று கருதுகிறார்கள்.
மகிழ்ச்சியும் மனக்குறையும்
இப்போது இந்த மனக் குறையை போக்க கங்கை புனித நீரை நாடு முழுவதும் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு தொடங்கி உள்ளது. இது ஒருப்பக்கம் மகிழ்ச்சிதான் என்றாலும் தபால் நிலையங்களில் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.