மகளை வரவேற்க மகிழ்ச்சியுடன் காத்திருக்கும் தூத்துக்குடி செவிலி மோனிஷாவின் தாய்!
தூத்துக்குடி: ஈராக்கிலிருந்து திரும்பும் எனது மகளை வரவேற்க மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றேன் என்று தூத்துக்குடி செவிலியான மோனிஷாவின் தாய் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த எட்விஜயம்மாள் மகள் லெசிமா ஜெரோஸ் மோனிஷா . செவிலியர் பட்டப்படிப்பு முடித்த இவர், கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி முதல் ஈராக் திக்ரித் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.
தற்போது ஈராக்கில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில் திக்ரித் நகரில் உள்ள மருத்துவமனையில் மோனிஷா உள்ளிட்ட இந்தியாவை சேர்ந்த 46 செவிலியர்களை தீவிரவாதிகள் சிறைப்பிடித்து வைத்திருந்தனர்.
அங்கு தவித்து வரும் மோனிஷாவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு மோனிஷாவின் தாயார் எட்விஜயம்மாள் கடந்த 20 தினங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், எட் விஜயம்மாளை நேற்று மதியம் தொடர்பு கொண்ட மோனிஷா தீவிரவாதிகள் தங்களை விடுவித்து விட்டதாகவும், தற்போது எர்பில் நகரில் இருந்து பேருந்து மூலம் பாக்தாத் விமான நிலையத்துக்கு அழைத்து சென்று கொண்டிருப்பதாகவும், அங்கிருந்து விமானம் மூலம் கொச்சிக்கு அனுப்பி வைப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
இந்த தகவல் அறிந்ததும் மோனிஷாவின் தாய் எட்விஜயம்மாள், சகோதரி ரெய்சா, சகோதரியின் கணவர் ஜனார்தன் ஆகியோர் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், மகளை மகிழ்ச்சியுடன் வரவேற்க காத்திருப்பதாக எட்விஜயம்மாள் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஈராக்கில் இருந்து இன்று மதியம் தனிவிமானம் மூலமாக கொச்சின் வந்தடைந்த 46 நர்ஸ்களும் தங்களது குடும்பத்தினருடன் கண்ணீர் மல்க இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.