ஆங்கிலத்தை விட இந்திதான் ரொம்ப முக்கியமாம்... சொல்கிறார் வெங்கய்ய நாயுடு
அந்நிய மொழியான ஆங்கிலத்தைவிட தேசிய மொழியான இந்தியை கற்பது நாட்டுக்கு நல்லது என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்: தேசிய மொழியான இந்தியையும் கற்பது முக்கியமானது என மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் பேசும் ஹிந்தியை கற்பதுதான் நல்லது என்றும், அது ஆங்கிலத்தைக் கற்பதைக் காட்டிலும் சிறந்தது என்றும் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தென்மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மத்திய அரசு, இந்தி மொழியை கட்டாயமாக அனைத்து துறைகளிலும் அமல்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், இது பல மொழிகள் பேசும் இந்திய மக்களின் கூட்டாட்சி மனோபாவத்தை சீர்குலைக்கும் முயற்சியாக உள்ளதென்று, பல்வேறு மாநில அரசுகளும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தி அவசியம்
இந்நிலையில், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, மத்திய அரசின் மொழிக் கொள்கை குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ மொழியான இந்தியை நாம் அனைவரும் கற்க வேண்டியது அவசியம் என்றார்.
அதிகரிக்கும் ஆங்கில மோகம்
இந்தியர்கள் அனைவரும், தங்களது தாய்மொழிக்கு அடுத்தப்படியாக, இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும். அதன்பிறகே, ஆங்கிலத்தை கற்க வேண்டும். ஆங்கில மோகம் இந்தியர்களிடையே அதிகரித்து காணப்படுவது சரியானதல்ல.
நானும் இந்தி எதிர்ப்பாளன்தான்
நான்கூட மாணவ பருவத்தில், இந்தி எதிர்ப்பாளராக, பல போராட்டங்களில் பங்கேற்றுள்ளேன். மைல் கற்களில், பெயர் பலகைகளில் இந்தி மொழியை தார் பூசி அழித்திருக்கிறேன்.
இந்தி அதிகாரப்பூர்வ மொழி
ஆனால், வளர்ந்த பிறகு, டெல்லிக்கு வந்த பிறகு, இந்தி மொழியின் முக்கியத்துவம் பற்றியும், அதன் மதிப்பு பற்றியும் புரிந்துகொண்டேன். மத்திய அரசின் அதிகாரப்பூர்வ மொழி அதுதான். அதனை நாம் அனைவரும், கற்றுக் கொள்ள வேண்டியது மிக அவசியம். இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் இந்தி மொழிதான் பேசுகிறார்கள். அந்த மொழி இல்லாமல், நம்மால் வளர்ச்சியை சாத்தியப்படுத்த முடியாது" இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசியுள்ளார்.