மண்பானை சுமந்து... உலக்கை குத்தி… கல்லூரி மாணவியர் மகளிர் தினம் கொண்டாட்டம்
தூத்துக்குடி: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக நடத்தப்பட்ட போட்டிகளில் கல்லூரி மாணவிகள் அசத்தினர்.
மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கல்லூரிகளில் பெண்களுக்கான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலுள்ள புனித ஓம் கல்வியியல் கல்லூரியில் ரோட்டரி சங்கம் மற்றும் பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக போட்டிகள் நடத்தப்பட்டன.
மாவரைக்க, அரிசிகுத்த என அனைத்திற்கும் மிசின் வந்துவிட்டது. எனவே பண்டைய கால பெண்களைப் போல அவர்கள் பயன்படுத்திய பொருட்களே போட்டிக்கான களமாக இருந்தது.
முறத்தில் புடைத்தல்
தட்டாங்கல் விளையாடுதல், முறத்தில் கம்பு, உளுந்துகளைப் புடைத்து கற்களை நீக்குதல், திருகு அரவையில் பாசிப்பயிறு திரிப்பது, உரலில் உளுந்தை உலக்கையால் குத்தி மாவாக்குதல், என பாரம்பரிய வேலைகளை செய்தனர்.
மண்பானை சுமந்து
இடுப்பிலும் தலையிலும் மண் பானையில் தண்ணீர் சுமத்தல், அகல் விளக்கேற்றி அணையாமல் வேகமாக நடந்து வருதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
கிராம மக்கள் பயிற்சி
பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் எப்படி புடைப்பது, திரிப்பது, உலக்கையில் குத்துவது என்று பயிற்சி அளித்தனர். அனைத்து மாணவிகளும் ஏதாவது ஒரு போட்டியில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டுமென்பது கல்லூரியின் விதிமுறை.
உரல், திருகை
மிக்ஸி, கிரைண்டர் போன்ற மின்சாதனங்களின் வருகையால் உரல், திருகு அரவை ஆகியவை ஓரமாக வீடுகளில் ஒதுக்கப்பட்டுவிட்டது. முந்தைய நாளே பக்கத்து கிராமங்களிலிருந்து உரல், திருகு அரவை ஆகியவை கல்லூரியில் வைக்கப்பட்டுவிட்டது.
மாவு இடிக்கணும்
உரலில் அரைகிலோ உளுந்து வீதம் மொத்தம் 8 உரல்களிலும், திருகு அரவைக்கு கால் கிலோ பாசிப்பயிறு வீதம் 8 திருகு அரவைகளிலும் திரிக்க வேண்டும்.
முறம் பாத்திருக்கீங்களா?
"எங்க வீடுகளில் தண்ணீர் குடம், பானை மூடி வைக்கவும், வத்தல், வடகம் காய வைக்கவும்தான் முறத்தை பயன்படுத்துறோம். பாட்டிகள் முறத்துல அரிசி, கோதுமையைப் புடைச்சுப் பாத்துருக்கோம். ஆனா, நாங்க புடைச்சதில்லை. உலக்கையில குத்தி உளுந்தை மாவாக்குற போட்டி ரொம்ப கஷ்டமாக இருந்தது என்றனர் மாணவிகள். சாதாரண விசயமில்லை
திருகு அரவை அரைக்குறதும் சாதாரண விசயமல்ல என்று கூறும் மாணவிகள் எல்லாத்தையும் விட மண்பானையை தலையிலயும், இடுப்புலயும் தூக்கிட்டு நடந்து வர்ற போட்டிதான் ஹைலைட் என்கின்றனர்.
நல்ல உடற்பயிற்சி
இந்தப் போட்டிகள் எல்லாமே நம்மளோடப் பாரம்பரியம் சார்ந்தது. எல்லாத்துக்கும் மேல உடம்புக்கு நல்ல எக்ஸர்ஸைஸ்.
போட்டியா இருந்தாக்கூட அந்தகாலத்துப் பெண்களோட உழைப்பையும், வலியையும் புரிஞ்சுக்கிட்டோம்'' என்றனர் ஆசிரியர் பயிற்சி மாணவிகள்.
அசத்தல் கல்லூரி
மகளிர் தின விழா என்று சொல்லி ஆட்டம், பாட்டத்தை சிறப்பிக்கும் விதமாக பல போட்டிகள் நடைபெறுவதற்கு மத்தியில் பாரம்பரியத்தை பறைசாற்றும் இவ்வகையான போட்டிகள் நடத்தியது சிறப்பானது.